சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே நவ.16 முதல் வந்தே பாரத் சிறப்பு சேவை!


வந்தே பாரத் சிறப்பு ரயில்

சபரிமலை சீசனை முன்னிட்டு நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி வாரத்தின் 7 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையும் வர உள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு வசதியாகவும் அதே நேரத்தில் கார்த்திகை மாதம் தொடங்குவதால் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காகவும் சென்னை- திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் வியாழக்கிழமை இயக்கப்படுவதால் வாரத்தின் அனைத்து நாட்களும் வந்தே பாரத் ரயில் சேவை கிடைக்கப் பெறுகிறது.

அறிவிப்பு

நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில்(06067) எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதே நாள் மறுமார்க்கத்தில் திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) திருநெல்வேலியில் இருந்த மாலை 3 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு எழும்பூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல் தாம்பரம், விழும்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

x