திருச்செந்தூர் ஆவணித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சார்த்தி உலா; பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சத்தில் பச்சை சார்த்திய கோலத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் விஷ்ணு அம்சத்தில் பச்சை சார்த்திய கோலத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. ஆவணித் திருவிழா 8-ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் பிரம்மா அம்சமாக வெள்ளை சார்த்திய கோலத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து சிவன் கோயில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

பச்சை சார்த்திய கோலத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்.

பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சார்த்தி பரியேறும் பெருமாள் வகையறா மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பச்சை சார்த்தி கட்டளைதாரர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மல்லிகா, ராமசுப்பிரமணியம் பிள்ளை சார்பில் சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடந்தது. பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு அணிந்து, மரிக்கொழுந்து மாலை அணிந்து விஷ்ணு அம்சமாக பச்சை சார்த்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கண் சார்த்தி வழிப்பட்டனர்.

மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், சுவாமி அலைவாயுகந்தபெருமான் தனித்தனி குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சார்த்தி மீண்டும் சிவன் கோயில் சேர்ந்தனர். விழாவின் 9-ம் நாளான நாளை (1-ம் தேதி) இரவு 9 மணிக்கு சுவாமி குமரவிடங்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை மறுநாள் (2-ம் தேதி) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும், 3-வதாக வள்ளியம்மன் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

x