முதலை வாய்ப்பட்ட பிள்ளையை திருப்பித் தந்த அவிநாசிலிங்கேஸ்வரர்


திருப்புக்கொளியூர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

விநாசம் - என்ற சொல்லுக்கு அழிவு என்று பொருள். அ-விநாசம் - என்றால் அழிவில்லாதது என்று பொருள். அவிநாசம் என்பதே அவிநாசி என்று மருவியது. இதன் புராணப்பெயர் திருப்புக்கொளியூர். கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சியாக விளங்குகிறது அவிநாசி.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே ஏழு நிலை கோபுரத்துடன் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில். இங்கு சுயம்புவாக சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இவர் அவிநாசியப்பர், அவிநாசி நாதர், பெருங்கேடிலியப்பர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். சுவாமி சன்னதிக்கு வலதுபுறத்தில் அம்பாள் சன்னதி இருக்கிறது. அம்பாளுக்கு கருணாம்பிகை நாயகி என்றும், பெருங்கருணை நாயகி என்றும் பெயர்கள்.

பிரம்மா தவமிருந்த தலம் இது. இத்தலத்து சுவாமியும், அம்பிகையும் தங்கள் பெருங்கருணையால் பக்தர்களுக்கு எவ்வித அழிவும் நேராமல் காப்பவர்கள் என்பதால், இத்தலம் அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் புராண சம்பவத்தைப் பார்ப்போம்.

அம்பாள் கருணாம்பிகை நாயகி, சுவாமி அவிநாசியப்பர் எனும் பெருங்கேடிலியப்பர்

சுந்தரர் பெருமான் ஒருமுறை இத்தலத்துக்கு வந்தார். அப்போது ஒரு வீட்டில் அந்தணச் சிறுவனுக்கு பூணூல் சடங்கு நடந்து கொண்டிருந்தது. அதற்கு எதிர்வீட்டில் வசித்த அந்தணத் தம்பதியர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். இதுபற்றி சுந்தரர் விசாரித்தார்.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் இவ்விரு வீடுகளைச் சேர்ந்த சிறுவர்களும் இங்குள்ள தாமரைப் பொய்கைக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது முதலையால் பிடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர், அவனை நினைத்து அழுது கொண்டிருப்பதும், தப்பி வந்த சிறுவனுக்கு பூணூல் சடங்கு நடைபெறுவதும் தெரியவந்தது.

சுந்தரர் மனம் வருந்தினார். இத்தலத்து இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வேண்டியபடியே குறிப்பிட்ட தாமரைப் பொய்கைக்கு வந்தார். அங்கு குளம் வற்றியிருந்தது. தண்ணீரும் இல்லை, முதலையும் இல்லை. அங்கிருந்தபடியே,

“உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்

அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே”

என்று பாடினார்.

பிள்ளையைத் தரச் சொல்லு என்று இறைவனுக்கு உத்தரவிடும் தோரணையில் அவர் பாடி முடிக்கவும் பொய்கையில் தண்ணீர் நிரம்பியது. எங்கிருந்தோ வந்த முதலையின் வாயில் இருந்து சிறுவன் வெளியே வந்தான். ஐந்து வயதில் மாயமான சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் கழிந்திருந்ததால், அப்போது எட்டு வயதாகி இருந்தது. பெற்றோரும் மற்றவர்களும் மகிழ்ந்தனர்.

திருப்புக்கொளியூர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் (சுவாமி சந்நிதி)

திருப்புக்கொளியூர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் (அம்பாள் சந்நிதி)

மேற்கண்ட பாடல் தவிர மேலும் ஒன்பது பாடல்களை அவிநாசி லிங்கேஸ்வரர் மீது சுந்தரர் பாடியிருக்கிறார். அவிநாசியில் கோயிலுக்கு தென்மேற்கே உள்ள தாமரைப் பொய்கையையும், அதன் கரையில் உள்ள சுந்தரர் கோயிலையும் இப்போதும் காணலாம். இக்கோயிலில் முதலை தனது வாயில் பிள்ளையை ஏந்தி வரும் சிற்பம் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.

பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று அவிநாசி லிங்கேஸ்வரர் இந்த பொய்கைக் கரையில் உள்ள சுந்தரர் பெருமான் கோயிலுக்கு எழுந்தருள்வார். அங்கு இந்த திருவிளையாடலும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். சித்திரை மாதத்தில் 14 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

அவிநாசி (திருப்புக்கொளியூர்) அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

x