கனமழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை


சதுரகிரி மலைப் பாதையில் உள்ள தாணிப்பாறை ஓடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆவணி மாதபிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பம் சாப்டூர் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய முக்கிய தினங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

ஆகஸ்ட் 17 முதல் 20-ம் தேதி வரை ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஆவணி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

x