கோலாகலம்...கொடியேற்றத்துடன் தொடங்கியது குலசேகரப்பட்டினம் தசரா விழா!


குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா இன்று காலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

கோயிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜையும், 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றன. இதில் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து காளி வேடம் அணியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தசரா விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. அதன் பின்னர், 9.30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிவிக்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவையொட்டி நிறைய பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து காணிக்கை பெற்று வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். இதற்காக பக்தர்கள் மாதக்கணக்கில் கூட விரதம் இருப்பார்கள். காளி வேடம் தொடங்கி பலவிதமான வேடங்களை அணிந்து வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் குலசை தசரா திருவிழாவில் போலீஸ் மற்றும் போலீஸ் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x