மகாளய அமாவாசை... இன்று முதல் நான்கு நாட்களுக்கு மலையேறி வழிபட அனுமதி!


சதுரகிரி மலை ஏறும் பக்தர்கள்

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் சதுரகிரியில் மலையேறி வழிபட பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அக்டோபர் 12 ம் தேதி வியாழக்கிழமை முதல் 15 ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமாவாசைக்கு மறுநாள் முதல் நவராத்திரி பூஜை தொடங்க உள்ளது. சதுரகிரி கோவிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24 ம் தேதி நடக்கிறது. இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சுந்தர மகாலிங்கம் கோயில்

ஆனால் வனத்துறையினர் நவராத்திரி பண்டிகையின் இறுதி நாட்களான 22 முதல் 24 ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவோ, இரவில் மலையில் தங்கவோ அனுமதி கிடையாது. சுவாமி தரிசனம் செய்தவுடன் அடிவாரம் திரும்ப வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

x