ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ் ஆடைகளுக்கு தடை... பூரி ஜெகநாதர் கோயிலில் ஜனவரி 1 முதல் அமல்


பூரி ஜெகநாதர் கோயில்

பூரி ஜெகநாதர் கோயிலில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தீவிர ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் தற்போது செல்போன் மற்றும் கேமராக்கள் கொண்டு செல்லவும், படம் எடுக்கவும் தடை அமலில் உள்ளது. இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு தீவிரமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிலர் அநாகரிகமான உடை அணிந்து வருவதால் நிதி துணை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரி ஜெகநாதர் கோயில்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாக குழு தலைவர் ரஞ்சன் குமார் தாஸ், “கோயிலின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பது எங்கள் பொறுப்பு. துரதிர்ஷ்டவசமாக சிலர் மற்றவர்களின் மத உணர்வுகளை பொருட்படுத்தாமல், கோயிலுக்கு செல்வது கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட், ஸ்லீவ்லெஸ், அரைக்கால் சட்டை அணிந்து, கடற்கரையிலோ, பூங்காவிலோ உலா வருவது போல் கோயிலில் காணப்பட்டனர். கோயில் பொழுதுபோக்குக்கான இடம் அல்ல. எந்த வகையான ஆடைகளை அனுமதிக்க வேண்டும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும். கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கும்” என கூறினார்.

x