காக்கும் கார்த்திகைச் செல்வன் - 25


ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச் சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் உள்ளது ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோயில். இத்தல முருகப் பெருமானை வழிபட்டால் பதவி யோகம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

ஆண்டார்குப்பம் முருகப் பெருமான் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது தனிச்சிறப்பு. இப்படி வித்தியாசமாக தரிசனம் தருவதால், எப்போதும் இங்கு பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

தல வரலாறு

ஒரு சமயம், சிவபெருமானை தரிசிக்க கைலாய மலை சென்ற பிரம்மதேவர், அங்கிருந்த முருகப் பெருமானை கவனிக்காமல் சென்றார். உடனே, பிரம்மதேவரை அழைத்த முருகப் பெருமான், “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா” என்று பிரம்மதேவர் ஆணவத்துடன் கூறினார்.

அவரது அகந்தையை அழிக்க நினைத்த முருகப் பெருமான் அவரை நோக்கி, “எதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் படைப்புத் தொழிலைச் செய்கிறீர்கள்? நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள் பார்ப்போம். ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை எனக்கு தெரிவிக்கவும்” என்றார். முருகப் பெருமானின் கேள்விக்கு விடை தெரியாமல் தவித்தார் பிரம்மதேவர். இதைத் தொடர்ந்து பிரம்மதேவர் சிறை வைக்கப்பட்டார்.

பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், உயர்ந்த பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விட வயதில் பெரியவராகவோ இருப்பது வழக்கம். ஆனால், இங்கு பிரணவத்தின் வடிவமான முருகப் பெருமான், பிரம்மதேவரை விட உயர்ந்தவராக இருக்கிறார். அதனால் அதிகாரத் தோரணையுடன், தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு பிரம்மதேவரை கேள்வி கேட்டுள்ளார் முருகப் பெருமான். இதை அமைப்பிலேயே இத்தலத்தில் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார். இத்தகைய வடிவத்தில் முருகப் பெருமானின் தரிசனம் கிடைப்பது மிகவும் அபூர்வமாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பிற்காலத்தில் பலர் வந்து இத்தல முருகப் பெருமானை தரிசித்து வந்தனர்.

ஒரு சமயம் துறவிகள் சிலர் இத்தலத்துக்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து வந்தனர். அப்போது தலயாத்திரை வந்த பக்தர் ஒருவர் இங்கு வந்தார். மாலையில் நீராடிவிட்டு முருகப் பெருமானை தரிசிக்க எண்ணிய பக்தர், நீராடுவதற்கு எங்கு செல்ல வேண்டும் என்று துறவிகளை வினவினார். அப்படி நீராடுவதற்காக தீர்த்தம் ஏதும் இங்கு இல்லை என்று துறவிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து அங்கு ஆண்டிக் கோலத்தில் வந்த சிறுவன் ஒருவன், பக்தரிடம் நீராடும் இடத்துக்கு தான் அழைத்துச் செல்வதாகக் கூறி, தன்னுடைய வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கிருந்து நீர் பொங்கியது. பக்தருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதில் நீராடிய பக்தருக்கு சிறுவன், முருகப் பெருமானாகக் காட்சி அளித்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருள்பாலிப்பதாக ஐதீகம்.

ஆண்டிக் கோல சிறுவனாக வந்து முருகப் பெருமான் அருள்பாலித்த தலம் என்பதால் இவ்வூர் ‘ஆண்டியர் குப்பம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘ஆண்டார் குப்பம்’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. ஆளும் கோலத்தில் முருகப் பெருமான் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. பால பருவத்தில் உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமான், கருணையாலும் வீரத்தாலும் உலகை ஆண்டு, இவ்வூரில் குடிகொண்டதால் ஆண்டார் குப்பம் என்ற பெயர் இவ்வூருக்குக் கிட்டியதாகவும் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

ஏகதள விமானத்தின் கீழ் அதிகார முருகனாக பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என்று எவ்வித ஆயுதமும் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன. அதிகாரத் தோரணையில் முருகப் பெருமான் இருப்பதால் ‘அதிகார முருகன்’ என்று அழைக்கப்படுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானை போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியர் சந்நிதிக்கு இடது மற்றும் வலது புறத்தில் வள்ளி, தெய்வானை ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் வரசித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். முன்மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன. தலவிருட்சமாக சரக்கொன்றை மரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முருகப் பெருமானால் சிறைபிடிக்கப்பட்ட பிரம்மதேவர், அவரிடம் மன்னிப்புக் கோரினார். சுவாமி சந்நிதி எதிரில் நீள்வட்ட சிலையாக பிரம்மதேவர் உருவம் இல்லாமல் (நடுகல் அமைப்பில்) தாமரை, கமண்டலம், அட்சரமாலையுடன் உள்ளார். பிரம்மதேவர் எக்காலமும் தனக்கு ஆணவம் தலைதூக்கக் கூடாது என்ற வேண்டுதலுடன் முருகப் பெருமானை தியானித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி உள்ளிட்ட தலங்களில் முருகப் பெருமான் யானை வாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மயில் மற்றும் சிம்ம வாகனத்துடன் முருகப் பெருமான் உள்ளார். தாய்க்குரிய (அம்பிகை) வாகனத்துடன் இங்கு முருகப் பெருமான் அருள்கிறார். சிம்மம் மயிலைத் தாங்கியபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்வர்த்தனர் என்ற பக்தருக்காக இக்கோயிலில் முருகப் பெருமான் எழுந்தருளியதாகவும், அவருக்காகவே பாலநதி என்ற தீர்த்தத்தை இங்கு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அருணகிரி நாதர், கிருபானந்த வாரியார் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரும் இத்தல முருகப் பெருமானைப் போற்றி வழிபட்டுள்ளனர்.

அந்நியருக்கும் அருளிய முருகன்

ஒருசமயம், இந்தப் பகுதி வழியாக படையை நடத்திக் கொண்டு சென்ற சுல்தான் மன்னர், இத்தல முருகப் பெருமானை தரிசிக்க வந்த அடியாரிடம் தனக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அவ்வாறே செய்ய, சுல்தான் மன்னருக்கு போரில் வெற்றி கிடைத்தது. இதற்கு நன்றிக் கடனாக, முருகப் பெருமானுக்கு கோயில் எழுப்ப சுல்தான் மன்னர் நிலம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

திருப்புகழ் போற்றும் தச்சூர் (ஆண்டார்குப்பம்)

‘அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த’ என்று தொடங்கும் திருப்புகழில் முருகப் பெருமானை, பலவாறு போற்றிப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

’அனைத்து விதத்திலும் ஞானம் பெற்றவராக, சிவபெருமானுக்கு உபதேசித்த முருகப் பெருமானே. மனம் என்னும் கோட்டையில் விளங்கும்படி மிக அதிகமாக தியானிப்பவர்களின் பக்தி என்னும் கட்டுக்குள் அகப்பட்டு நிலைத்திருக்கிறாய். தமிழில் ‘அ’ என்னும் எழுத்தை (இது சிவத்தை குறிக்கிறது) எனக்கு உபதேசித்த நீ, முக்திக்கு வித்தானவன்.

எப்போதும் அழிந்து போகாத வரம் பெற்ற சூரனையும் அவனது குடும்பத்தையும் மாய்த்த கோப (கோபம் கொண்ட) வேலை ஆயுதமாகக் கொண்டவனே. சூரனாகிய மாமரத்தில் இருந்து ஒரு தச்சனைப் போல மயிலையும் வேலையும் வருமாறு அதைப் பிளந்த நீ சித்த மூர்த்தி ஆவாய்.

குறப் பெண்ணாகிய வள்ளியை அவள் இருக்கும் இடத்துக்குச் சென்று மணந்து, தவறுதல் இன்றி நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊரின் வடக்கே அமைந்துள்ள வழியில் வீற்றிருக்கும் பெருமாளே...’

இவ்வாறு அருணகிரிநாதர் முருகப் பெருமானை நினைத்து, மனமுருகிப் பாடுகிறார்.

நேர்த்திக் கடன்

இக்கோயிலுக்கு தொடர்ந்து வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் மூன்று வாரம் வந்து நெய் தீபம் ஏற்றி பழிபட்டால், பதவி உயர்வும், சந்தான பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நினைத்தது நிறைவேற, பொறுப்பான பதவி கிடைக்க, அதிகாரமுள்ள பதவியில் இருப்போர் பணி சிறக்க, வழக்கில் வெற்றி பெற இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பிட்டும் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். மேலும், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல் நிகழ்வுகளும் நடைபெறும்.

பரணி நட்சத்திர தினத்தில் இக்கோயிலுக்கு வந்திருந்து அன்றிரவு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று, இங்கேயே தங்கியிருந்து கிருத்திகை (கார்த்திகை நட்சத்திரம்) வழிபாட்டையும் தரிசித்தால் சிக்கலான வாழ்க்கைப் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கார்த்திகை குமார சஷ்டி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளில் தெய்வானை திருமணமும், 9-ம் நாளில் வள்ளி திருமணமும் நடைபெறும். முருகன் அவதரித்த கார்த்திகை மாத குமார சஷ்டி சமயத்தில் சிறப்பு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

x