சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுப்பால் பக்தர்கள் தவிப்பு


வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்யது வந்தனர். இந்தநிலையில் பகல் 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் தவிப்பிற்கு உள்ளாகினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் வனத்துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக மலைப்பாதையில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் மலையேறவும், மலை இறங்கவும் முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருந்ததால் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் தொடங்கி, மலைப்பாதை முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டது.

தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு நுழைவுச்சீட்டு வாங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், பகல் 12 மணிக்கு மேல் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகினர். வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

x