காக்கும் கார்த்திகைச் செல்வன் - 19


சிக்கல் சிங்கார வேலவர்

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் நவநீ தேஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோயில், முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது. கோயிலின் ஒரே வளாகத்தில் சிவபெருமான், முருகப் பெருமான், திருமால் சந்நிதிகள் இருப்பது தனிச்சிறப்பு. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற தென்கரைத் தலங்களில் 83-வது தலமாகவும், 274 சிவாலயங்களில் இது 146-வது தலமாகவும் போற்றப்படுகிறது.

திருவாரூரில் இருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயில் ஆகும். சிக்கலில் பார்வதிதேவியிடம் முருகப் பெருமான் வேல் பெற்று, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் என்பது ஐதீகம்.

தல வரலாறு

முன்பொரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது, விண்ணுலகில் இருக்கும் காமதேனு பசு, உணவு கிடைக்காமல் தவித்தது. அப்போது மாமிசத்தை தவறுதலாக உண்டுவிட்டது. இதையறிந்த சிவபெருமான், காமதேனுவை புலியாக மாறும்படி சபித்துவிட்டார். தான் அறியாது செய்த தவறுக்காக, வருந்திய காமதேனு, சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரியது. மனமிறங்கிய சிவபெருமான், “பூவுலகில் மல்லிகாரண்யம் என்ற தலத்தில் நீராடி, அங்குள்ள ஈசனை வழிபட்டால், சாப விமோசனம் கிடைக்கும்” என்று திருவாய் மலர்ந்தார்.

மல்லிகை வனமாக இருந்த மல்லிகாரண்யம் தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டு வந்தார். மிகவும் பழமைவாய்ந்த இத்தலத்தில் இருந்த ஈசனை தினமும் வழிபட்டு வந்தார்.

சிவபெருமானின் ஆலோசனைப்படி காமதேனு இத்தலம் வந்து குளம் அமைத்து, நீராடியது. அப்போது அதன் மடியில் இருந்து பால் அதிக அளவில் சொரியத் தொடங்கியது. குளமே பாற்குளம் ஆனது. தேங்கிய பால் குளத்தில் இருந்து வெண்ணெய் திரண்டது. அந்த சமயத்தில் பாற்குளத்தில் திரண்ட வெண்ணெய்யைப் பயன்படுத்தி வசிஷ்ட முனிவர், லிங்கம் அமைத்து வழிபட்டார். இதன் காரணமாக, இத்தல ஈசன், ‘வெண்ணெய் நாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வழிபாடு நிறைவு பெற்றதும் லிங்கத்தை பெயர்த்து எடுக்க எவ்வளவோ முயன்றும், அதைப் பெயர்த்து எடுக்க முடியவில்லை. பெயர்த்து எடுக்கும்போது சிக்கலை ஏற்படுத்தியதால், இத்தலம் ‘சிக்கல்’ என்றானதாகச் சொல்லப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

நவநீ தேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததும், தெற்குப் பகுதியில் விநாயகப் பெருமானும், வடக்கில் தண்டபாணியும் அருள்பாலிக்கின்றனர். இரண்டாவது பிரகாரத்தில் சனி பகவான், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, துர்கை, சண்டீசர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயிலின் மையப் பகுதியில் 80 அடி உயரமுள்ள கட்டுமலை மேல் மூலவர் நவநீ தேஸ்வரர், சிங்காரவேலவர் சந்நிதிகள் உள்ளன. கட்டுமலையின் கீழ்ப்பக்கம் வேல் நெடுங்கண்ணி அம்பாள் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். சந்நிதியின் மேல்பாகத்தில் அம்பாள் முருகப் பெருமானுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்தல விநாயகர் சுந்தர கணபதி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

நவநீ தேஸ்வரர்

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக இத்தலம் கருதப்படுகிறது. விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். இத்தலத்தில் வழிபாடு செய்து, விஸ்வாமித்திர முனிவர், தனது தவ வலிமையை திரும்பப் பெற்றார் என்றும், முசுகுந்தச் சக்கரவர்த்தி தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. முருகப் பெருமானுக்கு வேல் வழங்குவதற்கு முன்பாக, பார்வதி தேவியே இத்தலத்தில் தவமிருந்ததாக அறியப்படுகிறது.

அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். யானை புகமுடியாதபடி கோச்செங்கட் சோழர் கட்டிய 72 மாடக் கோயில்களில் இத்தலமும் ஒன்று. அறுபடை வீடுகளில் ‘குன்று தோறாடலும்’ ஒன்று என்பதாலும் இத்தலமும் கட்டுமலை என்பதாலும், இத்தலம் அறுபடை வீடுகளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

வேக் நெடுங்கண்ணி அப்பாள்

சிங்கார வேலவர்

சிக்கல் சிங்கார வேலவர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் கோயில்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சிங்கார வேலவர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஒருகாலத்தில் சூரபத்மன் என்ற அரசன், தேவர்கள், முனிவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் துன்பங்களைக் கொடுத்து வந்தான். அழியா வரம் பெற்ற அவனை வதம் செய்ய முருகப் பெருமானால் மட்டுமே முடியும் என்று கருதிய தேவர்கள், இதுதொடர்பாக முருகப் பெருமானிடம் முறையிட்டனர். அவரும் அசுரனை வதம் செய்ய உறுதியளிக்கிறார்.

சூரனை அழிப்பதற்காக வேல் வேண்டி, இத்தலத்துக்கு வந்த முருகப் பெருமான், அம்மை அப்பர் முன் தவமிருந்தார். மகனின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, சக்திவேலை முருகப் பெருமானுக்கு அளிக்க விருப்பம் கொள்கிறார்.

அதன்படி முருகப் பெருமானுக்கு பார்வதி தேவி (வேல் நெடுங்கண்ணி அம்பாள்) வேல் கொடுத்து ஆசிகளை வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின்போது இந்த நிகழ்வு இங்கு வைபவமாக நடைபெறுகிறது. தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு தன் கோயிலுக்கு வந்து வீராவேசத்துடன் அமர்ந்து கொண்ட முருகப் பெருமானுக்கு வேலின் வீரியம் தாங்காமல் வியர்க்கிறது. அப்படி, முருகனுக்கு வியர்வை வெள்ளமாகப் பெருகும் சம்பவம் இன்றளவும் நடைபெறுகிறது.

சிங்கார வேலவர் திருமுகத்தில் வியர்வைத் துளிகள்...

பட்டுத் துணியால் பலமுறை துடைத்த பின்னரும் முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் என்று அறியப்படுகிறது. ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்ற வழக்குச் சொல் இன்றும் உள்ளது. அம்மை அப்பருக்கு நடுவில் தனிசந்நிதியில் அருள்பாலிக்கும் சிங்கார வேலவர், குழந்தை வரம் அருள்பவராக உள்ளார். சிக்கல் சிங்கார வேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும், சிங்கார வேலவருக்கு ‘சத்ரு சம்ஹார திரிசதை’ அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகி நன்மை விளையும் என்று கூறப்படுகிறது.

எட்டுக்குடி, எண்கண், சிக்கல் ஆகிய மூன்று தலங்களில் விளங்கும் முருகப் பெருமான் விக்கிரகங்கள் ஒரே அமைப்பு கொண்ட மூர்த்திகளாக இருப்பதும், இவை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோல வாமனப் பெருமாள்

சிவபெருமான் கோயிலில் பெருமாளுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, ஒரு சமயம், அசுரர் குல மன்னன் மகாபலி சக்கரவர்த்தி, தேவர்களுக்கு பல விதங்களில் இன்னல்கள் அளித்து வந்தான். இதுதொடர்பாக தேவர்கள், திருமாலிடம் முறையிட்டனர். தக்க சமயத்தில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக திருமால் அவர்களிடம் உறுதியளித்தார்.

அதன்படி திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது, இத்தலம் வந்திருந்து சிவபெருமானை வணங்கி, மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றார். இதன் காரணமாக, இத்தலத்தில் திருமாலுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டது. ‘கோல வாமனப் பெருமாள் என்று இத்தல பெருமாள் அழைக்கப்படுகிறார். இவரது சந்நிதிக்கு முன்பாக அனுமன் சந்நிதி உள்ளது.

திருப்புகழ் போற்றும் சிக்கல்

‘கன்னல் ஒத்த மொழிச் சொல்’ எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

‘அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக! அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே! கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!’

- என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம், ஐப்பசி கந்த சஷ்டி விழா இங்கே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு நாளும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா செல்லும்போது எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வர். தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை நட்சத்திர தினங்களில் நவநீ தேஸ்வரர் - வேல் நெடுங்கண்ணி அம்பாள், சிங்கார வேலவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தங்கள் துயரங்கள் நீங்க பிரார்த்தனை செய்யும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும் வெண்ணெய் நாதருக்கு அமாவாசை, பௌர்ணமி நாட்களில் நடைபெறும் உச்சிகால பூஜையின்போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்வது வழக்கம். சிங்கார வேலருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பால் குடம் ஏந்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.

இங்கு வரும் பக்தர்கள், ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்’ என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

x