ஆடி அமாவாசை: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 5 நாட்கள் அனுமதி!


விருதுநகர்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில், ஆடி அமாவாசை திருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா ஆக.5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு இன்று (ஆக.1) முதல் ஆக. 5-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவோ, மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கவோ அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

x