ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்


ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

17 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா ஆகஸ்ட் 14-ல் நிறைவடையும். ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. சாயரட்சை பூஜை, கால பூஜைகளுக்கு பின்னர் ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி, நான்கு ரத வீதிகளில் கொடியுடன் வலம் வந்தது.

காலை 9 மணிக்கு மேல், பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாள் மண்டபத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கன்னி லக்னத்தில் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்று. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில் நாயகர்வாசலில் தீபாராதனை முடிந்து பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நிகழ்ச்சி நிரல்: ஆகஸ்ட் 1ம் தேதி தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், ஆகஸ்ட் 2ம் தேதி திருவிளக்கு பூஜை, ஆகஸ்ட் 3ம் தேதி ராமநாதபுரம் சமஸ்தான மண்டகப்படி எழுந்தருளல், ஆகஸ்ட் 4ம் தேதி ஆடி அமாவாசை, ஆகஸ்ட் 5ம் தேதி தங்கப்பல்லக்கு, ஆகஸ்ட் 6ம் தேதி தேரோட்டம், ஆகஸ்ட் 7ம் தேதி ஆடிப்பூரம், ஆகஸ்ட் 8ம் தேதி ஆடித்தபசு, ஆகஸ்ட் 9ம் தேதி திருக்கல்யாணம், ஆகஸ்ட் 10ம் தேதி திருஊஞ்சல், ஆகஸ்ட் 12ம் தேதி மஞ்சல் நீராட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

x