செவ்வரளி மாலை சார்த்தினால் சிக்கல் தீர்ப்பான் சிங்காரவேலன்!


முருகன்

தைப்பூச திருநாளில், பழநிக்கு பாதயாத்திரை எனும் விஷயத்தை செட்டிநாட்டு மக்கள்தான் தொடங்கினார்கள் என்று சொல்லுவார்கள். சுமார் 180 வருடங்களுக்கு முன்பிருந்து காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பழநி பாதயாத்திரையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இறைவனை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனாலும் குறிப்பிட்ட நாட்களைச் சொல்லி வைத்திருக்கின்றன சாஸ்திரங்களும் புராணங்களும். தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை வணங்குவதற்கும் இப்படி ஏராளமான முக்கியமான நாட்கள் இருக்கின்றன. எல்லா நாளிலும் முருகக் கடவுளை வணங்கலாம். இருந்தாலும் குறிப்பிட்ட நாளில் வணங்குவது இன்னும் வளமும் பலமும் தந்தருளும்; வாழ்வை செழிக்கச் செய்யும் என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

பொதுவாகவே, பூசம் நட்சத்திரம் என்பதே விசேஷமான நட்சத்திரம். அதிலும் தைப்பூசம் என்பது இன்னும் மகத்துவம் வாய்ந்ததான நன்னாள். ஆறு முகங்களாக, ஆறு குழந்தைகளாக இருந்த முருகக் கடவுள் ஒருமுகம் கொண்டு, ஐக்கியமான நாளாக, ஏகமுகனாக முருகப்பெருமான் காட்சி அளித்ததாகப் போற்றப்படுகிறது, தைப்பூசத் திருநாள்.

ஞானத்தின் வடிவமாக முருகப்பெருமானைச் சொல்கிறது புராணம். ஆணவத்துடன் இருந்த சூரபத்மனை அழிக்கத்தான் வேல் கொண்டு புறப்பட்டான் முருகப் பெருமான். நம் கர்மாவை முடிவுக்குக் கொண்டு வந்து, இம்மையிலும் மறுமையிலும் அருள்பாலிக்கும் குருவாகத் திகழ்கிறார் ஞானவேல் முருகன்!

அப்படி ஞானத்தை அருளும் முருகப்பெருமானை வழிபடும் திருநாளாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பக்தர்களால், வழிபடப்படுகிறது. ஆறுபடைவீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமான் மட்டுமின்றி அனைத்து சிவாலயங்களிலும் உள்ள முருகக் கடவுளையும் தைப்பூச நாளில் வழிபடுவார்கள் பக்தர்கள். பழநியம்பதியில், மலை மீது குடியிருக்கும் தண்டாயுதபாணியை தரிசிப்பது இன்னும் சிறப்பானது. அதேபோல், அந்த நாளில் ராஜ அலங்காரத்துடன் திகழும் முருகக் கடவுளைத் தரிசிப்பது செல்வத்தைத் தந்து தரித்திரத்தைப் போக்கவல்லது என்பது ஐதீகம்!

இதனால்தான் தைப்பூசத் திருநாளின் போது பழநி திருத்தலத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். காவடி எடுத்து வருகிறார்கள். பால் குடம் ஏந்தி வருகிறார்கள். அரோகரா கோஷம் எழுப்பியபடி வருகிறார்கள். அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த லட்சக்கணக்கான மக்கள் பழநி என்றில்லாமல் அனைத்து முருகன் கோயிலுக்கும் தரிசிக்க வருகிறார்கள்.

தைப்பூச நாளில் பழநி திருத்தலம் என்றில்லாமல், எல்லாக் கோயில்களிலும் முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் விமரிசையாக நடைபெறும். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தைப்பூசத் திருநாளில், ஞானக் கடவுளை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எண்ணற்ற பலன்களைத் தரும்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாக எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானையும் சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் முருகக் கடவுளையும் காஞ்சியில் உள்ள குமரகோட்டம் கந்தனையும் திருப்போரூர் வேலவனையும் சிறுவாபுரி முருகப்பெருமானையும் தைப்பூசத் திருநாளில் பல்லாயிரக்கணக்கானோர் விரதம் மேற்கொண்டு தரிசிப்பார்கள். சென்னை வடபழநி கோயிலில், நீண்ட வரிசையில் இருந்தபடி, முருகப்பெருமானைத் தரிசிக்க பக்தர்கள் பல ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

தைப்பூசத் திருநாளான இந்த நன்னாளில், செவ்வரளி மலர் சார்த்தி செந்தில் வேலனை தரிசித்துப் பிரார்த்திப்போம். நம் வாழ்வில் இதுவரை இருந்த சிக்கல்களையெல்லாம் தீர்த்து வைப்பான் சிங்காரவேலன்!

கந்தா போற்றி... கடம்பா போற்றி!

x