தை செவ்வாய்க்கிழமையில், துர்கைக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று புற்றுக்கு மஞ்சளிட்டு பால் வழங்கி பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். தோஷங்களைப் போக்கியருளுவாள் புற்று மாரியம்மன். நமக்கு சந்தோஷங்களை கொடுப்பாள் துர்கையம்மன்.
செவ்வாயும் வெள்ளியும் அம்மனுக்கு உரிய நாள். அதிலும் தை மாதமும் ஆடி மாதமும் ரொம்பவே விசேஷமானவை. இந்த நாட்களில் அம்மனைத் தரிசிப்பதும் அம்மன் கோயிலுக்குச் சென்று கோஷ்டத்தில் உள்ள துர்கைக்கு எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே ரட்ஷணி ஸ்வாஹ:
என்கிற மூலமந்திரத்தை, தினமும் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில், அல்லது காலையும் மாலையும் சொல்லி வழிபடலாம். சிவாலயத்தில் உள்ள கோஷ்டத்திலும் துர்கை சந்நிதி கொண்டிருப்பாள். அங்கே சென்று அவளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு, கண்கள் மூடி, மனதுக்குள் இந்த மந்திரத்தை ஜபித்துக் கொண்டே இருங்கள்.
அதேபோல், அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுங்கள். புற்றுக்கு மஞ்சள் தூவி, பால் வழங்கி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கிரக தோஷங்களையெல்லாம் போக்கி அருளுவாள் புற்று மாரியம்மன்.
உங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் காவல்தெய்வமாகக் கோயில் கொண்டிருக்கும் அம்மனைத் தரிசிக்கவும் அவளை ஆராதிக்கவும் மறக்காதீர்கள். நம் வீடுகளுக்கு காவல் தெய்வமாகத் திகழ்பவள்தான் ஊரில் எல்லையில் கோயில் கொண்டிருக்கிறாள். நம்மூர் எல்லையில் காவல் காப்பவளை விடுத்து, வேறு எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டாலும் நமக்கு பெரிய பலன்களைக் கொடுக்காது என்று உறுதிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வாழ்வில், தெரிந்தோ தெரியாமலோ எவரையேனும் மனதளவில் காயப்படுத்தியிருந்தாலோ, அவர்களின் பொருட்களை அபகரித்திருந்தாலோ, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கிராம தேவதைகளிடம் நின்று ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டால் போதும்... நம்மை மன்னித்துக் காத்தருளுவாள் தேவி.
‘இனி எவரையும் எள்முனையளவும் காயப்படுத்தவோ வேதனைப்படுத்தவோ மாட்டேன். உனக்கு வழங்கும் சர்க்கரைப் பொங்கலை இன்னும் இனிப்பாக்கிக்கொள் எங்கள் தேவதையே’ என்று கிராம மக்கள், தை செவ்வாய்க்கிழமைகளில், படையலிடுவது இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது.
தை செவ்வாய் கிழமையில், உங்கள் வீட்டருகே எல்லையில் அமைந்திருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் படையலிடுங்கள். துர்காதேவியின் மூலமந்திரம் சொல்லி, எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். இன்னல்களையெல்லாம் போக்கியருளுவாள் தேவி!