தங்கச்சிமடம் புனித சந்தியாகப்பர் தேவாலய திருவிழா தேர்பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு


ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தங்கச்சிமடம் சந்தியாகப்பர் ஆலயத்தில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து மீனவ மக்களும் வழிபடுவது வழக்கம். இந்த ஆலயத்தில் 482-ம் ஆண்டு திருவிழா ஜுலை 16 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மாலையில் திருப்பலி பூஜையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று (புதன்கிழமை) இரவு பெருவிழா திருப்பலி பூஜையை சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் ஆரோன் நடத்தி வைத்தார்.

பங்குத் தந்தைகள் ஆரோக்கிய ராஜா, செபாஸ்டின், மரிய டல்லஸ், ஜான்பிரிட்டோ, எட்வின் ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித சந்தியாகப்பர், அன்னை மரியாள், மைக்கேல் சம்மனசு ஆகியோர் வலம் வந்தனர். இந்நிகழ்வுகளில் ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.

x