தை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வத்தை வணங்குவோம். வெள்ளிக்கிழமையிலும் குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வத்துக்குப் படையலிட்டு குடும்பத்துடன் போற்றுவோம். நம் சந்ததி சிறக்க இனிதே வாழ்வோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லுவார்கள். தை மாதம் என்பதே இயற்கையை வழிபடுவதில் இருந்துதான் தொடங்குகிறது. சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் மகர சங்கராந்தி என்றும் தைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. தை மாதப் பிறப்பை உத்தராயன புண்ய காலத்தொடக்கம் என்கிறது சாஸ்திரம்.
அதேபோல், கால்நடைகளை வணங்கும் விழாவாகவும் நிலத்தை வணங்குவதற்கான உழவுத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
ஒருவருக்கு வாழ்க்கையில், இஷ்ட தெய்வ வழிபாடு, எல்லை தெய்வங்களின் வழிபாடு என்பது மிக மிக முக்கியம் என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள். நமக்கு இஷ்டமான தெய்வங்களையும் சித்தபுருஷர்களையும் மகான்களையும் வழிபாடு செய்வதும் வணங்கி வருவதும் நம் வாழ்வில் நமக்கு மிகுந்த பலமும் வளமும் தந்தருளக்கூடியது. மனதில் உள்ள குழப்பங்களையும் கவலைகளையும் தேவையற்ற பயங்களையும் போக்கியருளும் சக்தி சித்தபுருஷர்களுக்கும் எல்லைத் தெய்வங்களுக்கும் உண்டு என்பது ஐதீகம்!
அதேபோல், முன்னோர் வழிபாடு என்பது நம் வாழ்வில் முக்கிய வழிபாடுகளில் ஒன்று. நம் மூதாதையர்களை அமாவாசை முதலான நாட்களில் அவசியம் வணங்கவேண்டும். அப்படி நாம் வணங்காமல் தவறவிடுவதுதான், பித்ரு சாபம் என்றும் பித்ரு பாபம் என்றுமாக நமக்கு எதிர்வினைகளைத் தருகிறது. நம் வளர்ச்சிக்கும் நிம்மதிக்கும் இடையூறாகவும் தடைகளாகவும் இருக்கின்றன.
முன்னோர் வழிபாட்டைச் செய்யச் செய்யத்தான் நம்முடைய ஏழு தலைமுறை பாவங்களும் விலகும். நமக்கு அடுத்த தலைமுறையானது வாழையடி வாழையென வளரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான், ஒவ்வொரு அமாவாசையான முன்னோர்களுக்கான நாளில் வணங்க அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதேபோல், உத்தராயன புண்ய காலத் தொடக்க அமாவாசையான தை அமாவாசை நாளிலேனும் வணங்க வலியுறுத்துகிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
இஷ்ட தெய்வம், எல்லைத் தெய்வம், முன்னோர் வழிபாடு முதலானவற்றையெல்லாம் விட மிக மிக முக்கியமானது குலதெய்வ வழிபாடு. குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பதுபோல, குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான், முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் எல்லை தெய்வங்களின் அருளும் இஷ்ட தெய்வங்களின் அருளும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
அதனால்தான் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தி வருகிறார்கள் ஆச்சார்யர்கள். மேலும் நாம் எந்த ஹோம பூஜைகள் செய்தாலும் அந்த பூஜையில் குலதெய்வத்தை அழைத்து, குலதெய்வ ஆராதனைகளைச் செய்துவிட்டுத்தான் அடுத்தடுத்த பூஜைகளை மேற்கொள்ளவேண்டும். அந்த அளவுக்கு குலதெய்வத்துக்கும் குலதெய்வ வழிபாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது சாஸ்திரம் என்று விளக்குகிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
குலதெய்வ வழிபாட்டை அடிக்கடி மேற்கொள்ளவேண்டும். இயலாதவர்கள் வருடத்துக்கு ஒருமுறையேனும் செய்யவேண்டும். குறிப்பாக, தை மாதத்தில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது அளவற்ற பலன்களை வாரி வழங்கக் கூடியது. தை மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாளில், குலதெய்வ வழிபாட்டைச் செய்யவேண்டும்.
தை மாதம் உத்தராயன புண்ய காலத்தின் தொடக்கம். இந்த புண்ய காலத்தில், தை மாத முதல் செவ்வாய்க்கிழமையிலும் கடைசி செவ்வாய்க்கிழமையிலும் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வதும் நம் குலதெய்வக் கோயிலில் பொங்கல் வைக்கும் நடைமுறை இருந்தால் அதனைச் செய்யலாம். குலதெய்வத்துக்கு வஸ்திரங்கள் சார்த்தி வழிபடலாம். மலர்களால் அலங்கரித்து வேண்டிக்கொள்ளலாம்.
இந்தத் தருணத்தில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்லமுடியவில்லையே என நினைப்பவர்கள், வீட்டில் இருந்தபடியே நம் குலதெய்வத்தை வணங்கி ஆராதித்து, நம் வீட்டுக்கு அழைத்து, பிரார்த்தனைகள் செய்யலாம். குலதெய்வத்தின் திருவுருப்படமோ சிலையோ இருந்தால், அவற்றுக்கு சந்தனம், குங்குமமிட்டு, மலர்களால் அலங்கரித்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வேண்டிக்கொண்டு நமஸ்கரிக்கவேண்டும். கணவனும் மனைவியும் தம்பதியாக இருந்து, குலதெய்வத்தை அழைத்து, ஒரு பத்துநிமிடங்கள் கண்மூடி அமர்ந்து நம் குடும்பத்துக்காக, நம் குலம் தழைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும். அதையடுத்து வருகிற தை அமாவாசையின் போது முன்னோர் வழிபாடு செய்வோம்தானே. அப்போது, குலதெய்வ வழிபாடு செய்த பூரிப்பில் நமக்கு நம் முன்னோர்கள் ஆசியும் அருளும் வழங்குவார்கள் என்பது உறுதி என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
குலதெய்வத்துக்கு விதம் விதமான, உங்கள் குடும்பத்தில் எது வழக்கமோ அந்த உணவுகளைப் படையலிட வேண்டும். குலதெய்வத்தை வணங்கிவிட்டு அந்த உணவை காகத்துக்கு வழங்கவேண்டும். அதேபோல, நான்கு பேருக்கேனும் அன்னதானம் செய்வதோ உணவுப்பொட்டலம் வழங்குவதோ நம் பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது என்பதை உணருங்கள். முடிந்தால், குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளும் அதேவேளையில் நம் வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை மனதில் வேண்டிக்கொண்டு, சுமங்கலிகளுக்கு புடவை, மஞ்சள், சரடு, குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கலாம்.
குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான், மற்ற வழிபாடுகளும் முன்னோர் வழிபாடு உள்ளிட்டவையும் நமக்கு பலன்களைக் கொடுக்கும். தை செவ்வாய்க்கிழமையில் குலதெய்வத்தை வணங்குவோம். வெள்ளிக்கிழமையிலும் குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வத்துக்குப் படையலிட்டு குடும்பத்துடன் போற்றுவோம். நம் சந்ததி சிறக்க இனிதே வாழ்வோம்!