இசையால் இறைவனை வசமாக்கலாம் என்பார்கள். அதனால்தான் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடினார்கள். நாயன்மார்கள் பதிகங்கள் பாடிப்பரவசமானார்கள். ஆண்டாள், ‘திருப்பாவை’ பாடி உள்ளமுருகினாள். அப்படித்தான் தியாகப் பிரம்மமும்! திருவையாறு என்றதும் அந்த இறைவனுக்கு இசையால் இனிக்க இனிக்க பாடல்கள் பாடி மகிழ்வித்தவரின் தியாகய்யரும் அவரின் அதிஷ்டானமும் நினைவுக்கு வரும். வருடந்தோறும் அவருக்கு சிறப்பும் விமரிசையுமாக நடந்தேறும் ஆராதனை விழா இன்று ஜனவரி 11-ம் தேதி புதன்கிழமை நடக்கிறது.
தியாகப்பிரம்மம், தியாகய்யர், தியாகராஜ சுவாமிகள் என்றெல்லாம் கொண்டாடப்படும் மகான் என்று போற்றுகிறார்கள் இசைக்கலைஞர்கள். வருடந்தோறும் மார்கழியில் நடைபெறும் இவருக்கான ஆராதனைப் பெருவிழாவில், ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் திருவையாறுக்கு வந்திருந்து, தங்களின் இசையால், இசைமகானை ஆராதித்து, வணங்கி மகிழ்கிறார்கள்.
கடந்த நான்கு நாட்களாகத் தொடங்கி நடைபெற்று வரும் தியாகராஜர் ஆராதனைப் பெருவிழா, இன்றுடன் நிறைவடைகிறது. இன்றுதான் மிக முக்கியமான நன்னாள். தியாகய்யர் அருளித்தந்த, பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள் கலைஞர்கள். மெய்சிலிர்க்கச் செய்யும் அற்புத ஆராதனை இது என்று நெகிழ்கிறார்கள் திருவையாறு மற்றும் சுற்றுவட்டார மக்கள்!
1767-ம் வருடம் திருவாரூரில் பிறந்தவர் தியாகபிரம்மம். ஆரூரில் பிறந்தாலே முக்தி என்பார்கள். அந்த ஆரூரில் பிறந்ததால்தான் அங்கே உள்ள சிவனாரின் திருநாமத்தையே குழந்தைக்கு தியாகராஜன் என்று சூட்டினார்கள். ராமபிரம்மம் - சீதம்மா தம்பதி, குழந்தையைச் சீரும் சிறப்புமாக வளர்த்தார்கள். தியாகராஜரின் தாத்தா, வீணா காளஹஸ்தி ஐயர், தஞ்சாவூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய வித்வானாக மரியாதை செய்யப்பட்டவர். இவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பாரம்பரியம் மிக்க குடும்பம்!
அம்மா மிக அழகாகப் பாடுவார். தாத்தா வித்வான். அப்பாவோ கல்விமான். ஆக, கலையும் கல்வியும் பாடலும் இசையுமாகவே கிடைத்து இசைபட வாழ்ந்தார் தியாகராஜர். இவரின் தந்தையார், ராமநவமி உற்சவ காலங்களில் தஞ்சை அரண்மனையில் உபந்யாசம் செய்வார். அதைக் கேட்பவர்கள் முன்னே அந்த ஸ்ரீராமரே வந்துவிட்டது போல் உருகிக் கதறி, அழுதே விடுவார்கள். அத்தனை உணர்ச்சிமயமாகச் சொல்வாராம்!
ஒருகட்டத்தில், ராமபிரம்மம் குடும்பத்தை திருவாரூரில் இருந்து தஞ்சாவூர்ப் பக்கமே வரச்சொல்லிவிட்டார் சமஸ்தான மகாராஜா. மனைவி குழந்தைகளுடன் திருவையாறில் குடியேறினார். அங்கே அவர்களுக்கு வீடும் பசுபதி கோயில் பக்கத்தில் நிலமும் எழுதித் தந்தார் மன்னர்.
சிறுவன் தியாகராஜன், சொண்டி வீணா வெங்கட்ரமணா என்பவரிடம் இசை பயின்றான். தன் குரலால், குரலுக்குள் ஜாலம் செய்த குழைவால், சொல்லித் தரும் பாடல்களை, பாடுகிற விதத்தால் ஜீவன் கொடுத்ததைக் கேட்டு வியந்தார் குருநாதர். பிறப்பிலேயே ஞானம் இருந்தாலொழிய, இத்தனை வசீகரமும் பாவனையும் குரலில் இருக்காது என உணர்ந்து பிரமித்தார்.
சிவா, விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் போல், முப்பெருந்தேவியர் போல், இசையில் மூன்று பேர் முக்கியமானவர்கள். இசை மேதைகள், இசை மகான்கள், மும்மூர்த்திகள் என்றெல்லாம் அவர்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படுகிறார்கள். முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் இந்த மூவரும் இசையுலகின் கடவுளர்களாகவே வணங்கப்படுகிறார்கள்.
அப்போது, தியாகய்யருக்கு உஞ்சவிருத்தி செய்துதான் பசியாற வேண்டும். அப்படி உஞ்சவிருத்தி செய்துதான் தன் குடும்பத்தாரையும் தன்னிடம் பயின்ற சீடர்களையும் அரவணைத்து, வழிநடத்தி வந்தார் தியாகய்யர்.
ஹரிதாஸ் எனும் அன்பர். காஞ்சிபுரத்துக்காரர். இவர்தான், ’’ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே இரு’’ என்று அறிவுறுத்தினார். அதுவும் ராமநாமத்தை 96 கோடி முறை சொல்லச் சொன்னார். இவரும் சொன்னார். கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கிட்டத்தட்ட 21 வருடங்கள் விடாமல் சொல்லி ராமநாம ஜபத்திலேயே இருந்தார் தியாகய்யர். தொடர்ந்து, ராமநாமத்தையே உச்சரித்து வந்த தியாகராஜருக்கு அந்த ராமபிரானின் பரிபூரண அருள் கிடைத்ததாகவும் அதனால்தான் இசையில் மிகப்பெரிய மகானாக, புதுப்புது இசையை அவர் வெளிப்படுத்தினார் என்றும் சொல்லிப் பூரிக்கிறார்கள் இசைக்கலைஞர்கள்!
இசையில் புதுப்புது சங்கதிகளை உருவாக்கியவர் தியாகப்பிரம்மம். இசையையும் தாளத்தையும் ராகத்தையும் மாற்றி, புதிய புதிய உத்திகளில் மடை திறந்த வெள்ளமென அவர் பாடிப் பிரவாகிப்பதை அந்த ராமபிரானே வந்து கேட்டுச் செல்வார் என்று விளக்குகின்றன தியாகய்யரின் சரிதம் சொல்லும் நூல்கள்.
தியாகப் பிரம்மம் என்றால் பஞ்சரத்ன கீர்த்தனை பிரசித்தம். அதாவது ஐந்து ராகங்களில் ஐந்து கீர்த்தனைகள். கேட்பவர்களே சொக்கிப் போவார்கள். நம்மைப் போல் சாமான்யர்கள் மட்டுமல்ல... அந்த இறைவனே சொக்கிப்போய் திருவையாறுக்கு வந்துவிடுவான்! மிக முக்கியமான ஐந்து கீர்த்தனைகளை எடுத்துரைத்துப் பாடிய தியாகய்யர், பகுள பஞ்சமி நன்னாளில்தான் முக்தி அடைந்தார்.
மார்கழி மாதத்தில் பெளர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய பஞ்சமியை நாம் தேய்பிறை பஞ்சமி, கிருஷ்ணபட்ச பஞ்சமி என்று சொல்வோம். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பகுள பஞ்சமி என்பார்கள். பஞ்சமி எனும் திதி ஐந்தாம் நாளைக் குறிக்கும். பஞ்சரத்ன கீர்த்தனைகளை நமக்கு அருளிய தியாகப் பிரம்மம், பஞ்சமி என்று சொல்லப்படும் ஐந்தாவது திதியில் முக்தி அடைந்ததும் அந்த மகானின் மகோன்னதத்தை எடுத்துரைக்கிறது என்கிறார் இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண்.
தியாகப்பிரம்மம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனைப் பெருவிழா. தினமும் காலையும் மாலையும் அவரின் அதிஷ்டானத்தில் பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்று க் கொண்டிருக்கின்றன. இன்று ஏராளமான இசைக்கலைஞர்கள், இசைப் பிரபலங்கள் திருவையாறில் சங்கமிக்கிறார்கள். அவரின் பாடல்களைப் பாடி, குறிப்பாக அவரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, குருமகானுக்கு ஆராதனை செய்யும் வைபவம் நம்மை நெக்குருகச் செய்துவிடும் அற்புத நிகழ்வு!
தியாகய்யரின் 176-வது ஆராதனைப் பெருவிழா. தியாகபிரம்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடியோ கேட்டோ... அந்த இசைமகானை வணங்கிப் போற்றுவோம்!
‘எந்தரோ மஹானுபாவ்லு அந்தரிகி வந்தனமு..!’ - எத்தனையோ மகான்கள்... அவர்கள் அத்தனை பேருக்கும் நமஸ்காரம்!
படங்கள் உதவி : திருவையாறு சுந்தரமூர்த்தி