திண்டுக்கல்: மதநல்லிணக்க கந்தூரி விழாவில் பொதுமக்களுக்கு சுடச்சுட நெய்சோறு விநியோகம்!


திண்டுக்கல்: மொஹரம் பண்டிகையையொட்டி இன்று திண்டுக்கல்லில் நடந்த மத நல்லிணக்க கந்தூரி விழாவில் பொதுமக்களுக்கு நெய் சாதம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூரில் அசேன் உசேன் மக்கான் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு மொஹரம் பண்டிகையையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை நடைபெற்ற 85ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சாதி, மத பாகுபாடின்றி ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் நெய் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு, மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பஞ்சா ஊர்வலம் நடைபெற உள்ளது.

இதேபோல், பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இன்று மொஹரம் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

x