’பாவக் கணக்கு - புண்ணியக் கணக்கு!’ - காஞ்சி மகான் சொல்லும் அருளுரை


நடமாடும் தெய்வம் என்று போற்றப்படுகிற உன்னதமான மகான் காஞ்சி மகான் என்று வணங்கப்படுகிற ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். காஞ்சி மகா பெரியவா என அன்புடனும் பக்தியுடனும் அழைக்கப்படுகிறார்.

அவர் தன் வாழ்நாளில், ஒவ்வொரு நாளும் நமக்கு அளித்த உபதேசங்கள் ஏராளம். அவரிடமிருந்து வருகிற வார்த்தைகள் நம் மொத்த வாழ்க்கைக்கும் வழிகாட்டக்கூடியவை என்று இன்றைக்கும் புகழ்ந்து ஏற்று அதன்படி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

அதனால்தான், காஞ்சி மகா பெரியவா, நம் காலத்தில் வாழ்ந்த மகான் என்று இன்றைக்கும் போற்றிக் கொண்டிருக்கிறது சமூகம். வாழ்வியலையும் ஆன்மிகத்தையும், பக்தியையும் இல்லறத்தையும் சின்னச் சின்ன உதாரணங்களுடன் நமக்குப் புரியு வகையில் அருளியிருக்கிறார் காஞ்சி மகான்.

காஞ்சி மகா பெரியவா அருளியவற்றை ஒருவர் ஏற்று, உள்வாங்கி, நடக்கத் தொடங்கினாலே, செம்மையான வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம். குழப்பமற்ற மனநிலையை அடைந்துவிடலாம். எவருக்கும் தீங்கு செய்யாத எண்ணத்துடன் இருந்துவிடலாம்.

புகழ்ச்சியை விரும்பாத மனிதர்களே இல்லை. எல்லோரும் புகழுக்கு மயங்குகிறவர்கள்தான். ’‘ஒருவரைப் புகழ்ந்து பேசுவதற்கும் கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். ஒரேயடியாகப் புகழ்ந்தால், மனதில் அகங்காரம் உண்டாகிவிடும்’’ என அருளியுள்ளார் காஞ்சி மகான்.

அதேபோல், ‘’பொழுதுபோக்கு என்ற பெயரில், நேரத்தை ஒருபோதும் வீணாக்கிவிடக் கூடாது. அதற்கு மாறாக, பிறருக்குச் சேவை செய்வதற்காக, நாம் எப்போதும் முன்வரவேண்டும். அப்படிச் சேவை செய்வதுதான், உண்மையான, பயனுள்ள பொழுதுபோக்கு’’ என்கிறார்.

சிந்தனை குறித்தும் எண்ணங்கள் குறித்தும் மகா பெரியவா நமக்கு அற்புதமாக விளக்கியுள்ளார். ‘’எண்ணத்தால் நாம் தூய்மையாக இருக்கவேண்டும். அப்படி எண்ணத்தால் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்குத்தான் வழிபாடுகளையும் பூஜைகளையும் சாஸ்திரங்கள் சொல்லிவைத்திருக்கின்றன. நாம் செய்யும் பூஜைகளால், கடவுளுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. கடவுளுக்கு பூமாலைகள் சூட்டுவதாலும் விதவிதமான பட்சணங்களை நைவேத்தியமாகப் படைப்பதாலும் அபிஷேக ஆராதனைகளைச் செய்வதாலும் கடவுளுக்கு ஒன்றுமில்லை. அந்த வழிபாடுகள் அனைத்துமே, நம்முடைய மனத்தைத் தூய்மைப்படுத்துவதற்குத்தான்’’ என அருளுகிறார்.

‘’நமக்கு ஒரு துன்பம் வந்தால், அந்தத் துன்பத்துக்குக் காரணமாக, யார் யாரையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், மனதால்தான் எல்லாவிதமான துன்பங்களும் உண்டாகின்றன என்பதை நாம் உணருவதே இல்லை.’ஆசைப்படாதே’ என்று இந்த மனதை இழுத்துப்பிடித்து நிறுத்துவதற்குத்தான் மெனக்கிடுகிறோம். இது சுலபமில்லை. ஆனால், அப்படி நிறுத்துவதில்தான் இருக்கிறது பேரானந்தம்” என்கிறார் காஞ்சி மகான்.

பாவ - புண்ணியம் குறித்தும் விளக்குகிறார் காஞ்சி மகாபெரியவா. ’‘ஒன்றை மட்டும் நாம் எப்போதும் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டும். செய்த பாவமும் புண்ணியமும் அத்தோடு முடிந்துவிடாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். செய்த பாவமும் அதற்கான தண்டனையும் நிச்சயம் நமக்குக் கிடைத்தே தீரும். அதேபோல, செய்த புண்ணியமும் அதற்கான நன்மையும் நம்மை ஒருநாள் வந்தடையும் என்பதும் உறுதி என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த பாவ - புண்ணியக் கணக்குகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்” என நமக்கு அருளியுள்ளார் காஞ்சி மகா பெரியவா.

x