நமக்கு இஷ்ட தெய்வம் இருக்கலாம். அந்தத் தெய்வத்தை அடிக்கடி சென்று வணங்கலாம். ஆனால், குலதெய்வ வழிபாட்டை மட்டும் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்கிறது தர்மசாஸ்திரம். நம் குலத்தைக் காக்கும் தெய்வமே குலதெய்வம் என்று போற்றப்படுகிறது. வம்சம் வம்சமாகத் தொடரும் வழிபாடுகளில், குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வமும் குலதெய்வம்தான்! குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பது போல், குலதெய்வத்தை வணங்கி அருளைப் பெற்றால்தான், மற்ற தெய்வங்களின் அருளைப் பெறமுடியும்!
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவேத் திகழும் என்பது ஐதீகம். ஆனால், அதன் சக்தியை அளவிடமுடியாது. தெய்வத்தில், சிறு தெய்வம், பெரிய தெய்வம் என்று எல்லைகளெல்லாம் இல்லை. எமதருமராஜாகூட ஒருவரது குலதெய்வத்தின் அனுமதி பெற்றுதான் உயிரை எடுக்கமுடியும் என்கிறது புராணம்.
குலதெய்வம் என்பது நம் முன்னோர்களில் தெய்வமாக மாறி விட்ட புண்ணிய ஆத்மாக்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினைச் சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள். எனவேதான், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று பெருமையுடன் அழைத்து வணங்குகிறோம்.
குலதெய்வங்கள், கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.
மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட, பெளர்ணமியிலும் அமாவாசையிலும் வியாழக்கிழமையிலும் விரதமிருந்து வழிபடுவதுதான் முழுமையான பலன்களைத் தந்தருளும் என்று சொல்லிவைத்திருக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மேலும், வருடத்தின் முதல் நாளன்று அதாவது சித்திரைத் திருநாளின் முதல்நாளில், குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்துவந்தால், குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என்பது உறுதி.
பொதுவாக ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் ஐப்பசி மாதத்தின் பெளர்ணமி, அமாவாசை மற்றும் ஐப்பசி மாதத்தின் வியாழக்கிழமைகள் குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்தவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குடும்பத்தில் ஒற்றுமையைக் கொடுக்கும். சந்ததியைப் பெருக்கும் என்கிறார்கள்.
எனவே, ஐப்பசி வியாழக்கிழமைகளில், அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதை தவறாமல் செய்யுங்கள். அன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், நம் குலம் சிறக்கும். குடும்பமும் மேன்மை பெறும். குலதெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து நம் குடும்பமும் வம்சமும் காக்கப்படும், வளர்க்கப்படும் என்பது உறுதி!
குலதெய்வ வழிபாட்டில் மிக முக்கியமாகச் சொல்வது... கூட்டு வழிபாடு! அண்ணன், தம்பி குடும்பத்தினர் என அனைவரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குலதெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் இதனால் மகிழ்ச்சி அடைகின்றனர். பித்ருக்களின் பரிபூரண ஆசியும் நமக்குக் கிடைக்கும்.
கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வக் கோயில் இருக்கும். எனவே, எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். பலருக்கும் குலதெய்வம்... காடு, மலை, வயல்வெளி என்றே இருக்கிறது.
அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடத்துக்கு இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது என விவரிக்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.
பொதுவாக பெண்களுக்கு இரண்டு குலதெய்வங்கள். அதாவது, பிறந்தவீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன்பு, பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவார்கள். திருமணமானதும் கணவர் வீட்டில் உள்ள குலதெய்வத்தையே வழிபடுவார்கள். அதேசமயம், நல்லநாள் பெரியநாள் என்றாலோ, திருமணம் முதலான பத்திரிகையடித்து விழாக்கள் வைத்தாலோ இரண்டு குலதெய்வக் கோயிலுக்கும் வைத்து வணங்குவது விசேஷ பலன்களைக் கொடுக்கவல்லது.
’’இதுவரை பெண்கள் யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்தவீட்டின் குலதெய்வத்திற்கு விழாக் காலங்களிலேனும் சென்று வழிபாடு செய்வது உத்தமம். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிகமிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் என எதுசெய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் நாம் விரும்புகிற பலன்கள் கிடைக்காது’’ என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்!
எனவே, உங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அந்தக் கோயிலுக்கு முடிந்த அளவுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். நம் முன்னோர்களும் குலதெய்வமும் ஒன்றுதான். எனவே, குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு செய்வது விசேஷம் மிக்கது.
வெளியூரில் இருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், வீட்டிலேயே குலதெய்வப் படத்தை அலங்கரித்து, உங்கள் வீட்டுக்குப் பாரம்பரியமான முறையில், வழக்கமான வகையில் படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யலாம். நிச்சயமாக உங்கள் குலதெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கும்.