சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்!


சரஸ்வதி தேவி

தேவியருக்கான பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை நவராத்திரி. இந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாள் வைபவம், சரஸ்வதி பூஜையாகவும் ஆயுதபூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஆனானப்பட்ட சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி. அது... சிவராத்திரி. ஆனால் தேவியருக்கோ, ஒன்பது ராத்திரி... அவை நவராத்திரி என்றொரு சொலவடை உண்டு.

அலங்கரிப்பது பெண் தெய்வங்களுக்குப் பிடித்தமான ஒன்று. சிவனாரை அபிஷேகப்பிரியன் என்பார்கள். பெருமாளை அலங்காரப்பிரியன் என்பார்கள். அலங்காரப்பிரியனுக்கு உரிய புரட்டாசி மாதத்தில், அமாவாசையை அடுத்து பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையிலான ஒன்பது நாட்களும் நவராத்திரி என்று போற்றப்படுகிறது. பெண் தெய்வங்களைக் கொண்டாடுகிற நாட்கள் இவை!

ஒன்பது நாட்களும் பல வீடுகளில் கொலு வைப்பார்கள். ஆலயங்களிலும், கொலு வைபவம் நடைபெறும். இந்த கொலுவைக் காண வயது வித்தியாசமின்றி அனைவரும் வருவார்கள். இல்லத்துக்கு வருகிற பெண்களுக்கு, மங்கலப் பொருட்கள் கொடுத்து வழியனுப்பி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் தேவிக்கு உகந்த கோலங்களிடுவார்கள். உரிய ராகங்களில் பாடுவார்கள். உரிய நைவேத்தியங்களைப் படைத்து அனைவருக்கும் வழங்குவார்கள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் நவமி திதி. இதையே ஆயுதபூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடுகிறோம். முதல்நாளே, வீட்டைச் சுத்தமாக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பூஜை மாடங்களையும் பூஜையறைகளையும் சுவாமி படங்களையும் துடைத்து, சுத்தப்படுத்திக் கொண்டுவிடவேண்டும்.

காலை எழுந்ததும், மாவிலைத் தோரணத்தை வாசலில் கட்டவேண்டும். இல்லத்தில், எல்லோரும் நீராடிவிட்டு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு முன்னதாக, நம் வீட்டுக் குழந்தைகளின் புத்தகங்கள், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகங்கள் முதலானவற்றை வைத்து அவற்றுக்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

சரஸ்வதிதேவியே இந்த நாளில் பிரதான தெய்வம். நம்மைப் படைத்த பிரம்மாவையும் பிரம்மாவின் மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவதற்கு உரிய அற்புதநாள். எனவே, பிரதானமான இடத்தில், சரஸ்வதிதேவியை எடுத்துவைத்து பூக்களால் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அழகுப்படுத்த வேண்டும். தாமரை முதலான மலர்கள் உகந்தவை.

அக்டோபர் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயுதபூஜைக்கு உரிய நாள். சரஸ்வதி பூஜைக்கு உரிய நாள். சரஸ்வதி பூஜை செய்வதற்கு உகந்த நேரம் என்று காலை 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரத்தை ஆச்சார்யப் பெருமக்கள் சொல்கிறார்கள்.

சரஸ்வதிதேவிக்கு பழங்கள், இனிப்புகள், அவல், பொரி, வெல்லம் முதலான கலவையும், சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் என நைவேத்தியமும் படைத்து, குடும்பமாக எல்லோரும் பூஜித்து வணங்கி வழிபடவேண்டும். இசைக்கலைஞர்கள், இசையில் நாட்டமுள்ளவர்கள், அவர்கள் வாசிக்கும் இசைக்கருவிகளை புத்தகங்களைப் போல் சுவாமிக்கு முன்னதாக வைத்து அவற்றை வணங்கவேண்டும்.

பூஜையில் வைக்கப்படுகின்ற புத்தகங்கள், பேனா முதலானவற்றையும் இசைக்கருவிகளையும் அன்றைய தினம் எடுக்கக்கூடாது. அதாவது சரஸ்வதி பூஜை நாளில், எடுக்காமல் பூஜையறையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது ஐதீகம்.

மறுநாள், விஜயதசமி நன்னாள். அதாவது நவராத்திரியின் ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாள். இந்தநாளை விஜயதசமி எனக் கொண்டாடுகிறோம். இந்தநாளில், முதன்முதலாக குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பார்கள். அதேபோல், இசைத்துறையில் சிறந்து விளங்கவேண்டும் என நினைக்கும் குழந்தைகளை, பாடலில் சிறந்து விளங்கவேண்டும் என ஆசைப்படும் குழந்தைகளை விஜயதசமி நாளில் முதன்முதலாகச் சேர்ப்பது வழக்கம்.

முதல்நாளான சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையில் பூஜைக்கு வைத்த புத்தகங்களை, பேனாவை விஜயதசமி நாளில், எடுத்துப் படிப்பதும் எழுதுவதும் இசைக்கருவியெனில் வாசிப்பதுமாகப் பழகவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சரஸ்வதி பூஜை (அக்டோபர் 4ம் தேதி) செய்ய உகந்த நேரம் : காலை 8 முதல் 9 மணி வரை.

விஜயதசமி அன்று (அக்டோபர் 5ம் தேதி) பூஜை செய்து படிக்கும் நேரம் : காலை 9 முதல் 10 மணி வரை.

சரஸ்வதி பூஜையையும் ஆயுதபூஜையையும் செவ்வாய்க்கிழமையில் கொண்டாடுவோம். கலையின் கடவுளை வணங்குவோம். விஜயதசமி நன்னாளில் பூஜையை நிறைவு செய்து, குழந்தைகளை ஒருமணி நேரமேனும் படிக்கச் செய்வோம். கலைகளிலும் கல்வியிலும் நம் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

x