மகாளய பட்ச அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனை செய்ய மறந்துவிடாதீர்கள். நம் இந்தப் பிறப்பின் கடமைகளில் பித்ரு ஆராதனை என்று சொல்லப்படும் முன்னோர் ஆராதனையும் மிக மிக முக்கியமானது. இன்று செப்டம்பர் 25-ம் தேதி மகாளயபட்ச அமாவாசை. இந்தநாளில், முன்னோரை வழிபடுவோம். நமக்கும் நம் சந்ததியினருக்கும் அருளாசி வழங்கி அவர்களின் ஆத்ம மகிழ்வில் திளைப்பார்கள்.
பெளர்ணமி என்பது நாம் நமக்குள் நம்மைத் தேடுவது. அமாவாசை என்பது நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்த முன்னோர்களை வணங்குவது. அதனால்தான் பெளர்ணமியில் பூஜைகளில் பங்கு கொள்கிறோம். கிரிவலம் முதலான வழிபாடுகளைச் செய்கிறோம். அதேபோல், அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நன்னாள்.
இந்த நாளில், முன்னோர்களுக்கு நாம் செய்கிற ஆராதனைகள் வழிபாடுகள் என அனைத்துமே அவர்களைப் போய்ச் சேரும். இதில் மகிழ்ந்து அந்த ஆத்மாக்கள் நமக்கு அருளாசி வழங்குவார்கள்.
பித்ருக்களை வணங்குவதை, பித்ருக் கடன் என்றே விவரிக்கிறது சாஸ்திரம். கடன் என்றால் கடமை. நம்முடைய இந்த வாழ்க்கையில், நமக்கான மிக முக்கியமான கடமை என்பதே முன்னோர் வழிபாடுதான். வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு மலர் சூட்டி வழிபடலாம். தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடலாம். படையலிட்டு வணங்கலாம். படையல் உணவை முன்னோர்களுக்குப் படைத்துவிட்டு, காகத்துக்கு உணவு வைத்துவிட்டு வேண்டிக்கொள்ளலாம்.
அமாவாசைகளில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலானவை மிக மிக முக்கியமான அமாவாசைகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த நாளில், நீர்நிலைகளில் நீராடுவது மகா புண்ணியம். அதாவது கடலிலோ நதியிலோ குளத்திலோ நீராடுவதும் நதிக்கரையிலோ குளத்தங்கரையிலோ கடற்கரையிலோ தர்ப்பணம் முதலான காரியங்களைச் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
எள்ளும் தண்ணீரும் ‘அர்க்யமாக’க் கொண்டு முன்னோர்களின் பெயர்களை மூன்று முறை சொல்லிவிடுவது, நம் சந்ததிக்குத்தான் பெரும் புண்ணியமாகப் போய்ச் சேரும் என்பது ஐதீகம். நாம் எந்த ஜென்மத்திலோ... தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
விடுமுறை நாளில் வந்திருக்கும் இந்த மகாளய பட்ச அமாவாசையை, நம் முன்னோர்களுக்காக ஒதுக்கி, ஆத்மார்த்தமாக பித்ரு வழிபாட்டைச் செய்வோம். வளமும் நலமும் பெறுவோம்!