புரட்டாசி மாதத்தை புண்ணியம் நிறைந்த மாதம் என்பார்கள். இது பெருமாளுக்கு உரிய மாதம். எனவே, இந்த மாதம் முழுக்க, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் வீட்டில் இருந்தபடியே பெருமாளை பிரார்த்தனை செய்வதும் எல்லா வளமும் தந்தருளும் என்பது ஐதீகம்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என அருளியுள்ளார் மகாவிஷ்ணு. ஆனாலும்கூட புரட்டாசி மாதத்தை ’பெருமாள் மாதம்’ என்றே போற்றி வணங்குகிறோம். ஆடி மாதம் எப்படி அம்பிகைக்கு உரிய மாதமோ அதேபோல் புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம்.
இந்த மாதத்தில், அசைவப் பிரியர்கள் கூட சைவ உணவையே எடுத்துக் கொள்கிறார்கள். மற்ற சமயங்களில் எப்படியோ... மற்ற மாதங்களில் சனிக்கிழமைகளில் அசைவு உணவு எடுக்காமல் இருப்பார்கள். புரட்டாசி வந்துவிட்டாலோ... மாதம் முழுவதுமே அசைவத்தை ஒதுக்கிவைத்துவிடுவார்கள் பக்தர்கள்.
புரட்டாசி மாதத்தில் திருமாலின் திவ்ய திருநாமங்களைச் சொல்வதே புண்ணியம் என்கிறது விஷ்ணு புராணம். ‘கேசவா’ என்றோ ‘மதுசூதனா’ என்றோ ‘நாராயணா’ என்றோ எப்படிச் சொல்லி அழைத்தாலும் நமக்கு அவை பெரும்புண்ணியத்தைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். புரட்டாசி மாதத்தில்தான் ‘வெங்கட்ராமா... கோவிந்தா’ என்று உச்சரிப்பது பெரும்பாலானோரின் வழக்கம். அந்தக் காலத்தில், கையில் செம்புடன் நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு, ‘வெங்கட்ராமா... கோவிந்தா...’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்கு வீடு போய் நின்று அரிசியைப் பெறுவார்கள். ஒரு உஞ்சவிருத்தி போல், இப்படி யாசகமாகப் பெற்ற அரிசியை அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழங்குவார்கள்.
அதேபோல் காசாகவோ பணமாகவோ கொடுப்பதை, கோயில் உண்டியலில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இப்படி உஞ்சவிருத்தி போல், ‘வெங்கட்ராமா... கோவிந்தா...’ என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு வீட்டுவாசலிலும் நிற்கும்போது, நமக்குள் இருக்கிற கர்வம், ஆணவம் எல்லாம் காணாமல் போய்விடும். கடவுளுக்கு முன்னே எல்லோரும் சமம் எனும் நிலையை உணருவோம்.
புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் காலையில் அல்லது மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தாலோ அல்லது ஒலிக்கவிட்டுக் கேட்டாலோ நம் பாவங்கள் அனைத்தும் பறந்தோடச் செய்வார் பரந்தாமன். அதேபோல், புரட்டாசி மாதம் முழுவதுமே தினமும் துளசி தீர்த்தம் பருகி வந்தால், நம் ஆன்மாவும் மனமும் சுத்தமாகும். தீய சக்திகள் நம்மை அண்டாது என்பது ஐதீகம்.
’பெருமாள் மாதம்’ என்று போற்றிக் கொண்டாடப்படுகிற புரட்டாசி மாதம், செப்டம்பர் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. சூரியனுக்கு உரிய நாளில் தமிழ் மாதமான புரட்டாசி பிறப்பது ரொம்பவே சக்தி வாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு, பெருமாளை வணங்கிப் பிரார்த்தனை செய்யலாம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளலாம்.
வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு, தினமும் கையளவு துளசியைச் சார்த்தி, இரண்டு கற்கண்டை நைவேத்தியம் செய்து ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதை யெல்லாம் தந்தருளுவான் வேங்கடவன். கவலைகளில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் போக்கியருளுவான் மகாவிஷ்ணு. எல்லா வளமும் நலமும் தந்து இனிதே வாழச்செய்வான் ஏழுமலையான்!