சிங்கம்புணரி | நள்ளிரவில் நடந்த கழுவனை விரட்டும் விநோத திருவிழா!


சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி தேர் சக்கரம் ஏறுவதற்காக மண்ணால் செய்யப்படும் கழுவன், கழுவச்சி உருவ அமைப்பு.

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் நள்ளிரவில் நடைபெற்ற கழுவனை விரட்டும் விநோத திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரியில் பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி திருவிழா மே 12-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. மே 16-ம் தேதி திருக் கல்யாணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கழுவனை விரட்டும் விநோதத் திருவிழா நடைபெற்றது.

இதில் கழுவன் வேடமிட்ட ஒருவரை கயிற்றில் கட்டி கோயிலில் நாட்டார்கள் அமர்ந்திருந்த மண்டபத்துக்கு கிராம மக்கள் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். பின்னர் கோயிலில் இருந்தவர்கள் கழுவன் வேடத்தில் இருந்தவரை விரட்டத் தொடங்கினர். அவரும் பதிலுக்கு விரட்டினார். பின்னர், அவர் ஊரை விட்டு வெளியேறினார்.

இதில் ஏராள மானோர் பங்கேற்றனர். மேலும் நாளை (மே 20) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் மக்களால் விரட்டப்பட்டு ஊருக்கு வெளியே படுத்திருந்த கழுவன், அவரது மனைவி கழுவச்சி மீது சுவாமி வலம் வரும் தேர் சக்கரம் ஏறி, இரு வரும் உயிரிழக்கும் நிகழ்ச்சி நடை பெறும். தொடர்ந்து மே 21-ம் தேதி நள்ளிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி யுடன் விழா நிறைவு பெறும்.

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கழுவன் விரட்டும் நிகழ்வு.

இது குறித்து சிங்கம்புணரி மக்கள் கூறியதாவது: கழுவன் விரட்டும் திருவிழாவுக்கு இரு விதமான வரலாறு கூறப்படுகிறது. இதில் பழங்காலத்தில் கிராமத்தில் திருட வந்த கழுவனை மக்கள் பிடித்து நாட்டார்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அக்கழுவனுக்கு மரியாதை செய்து ஊரைவிட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. மற்றொன்று, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில், சமணர்களை கழுவேற்றம் செய்ததை நினைவுப்படுத்தும் வகையில், இத்திருவிழா நடத்தப் படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.