சந்ததியை செழிக்கச் செய்யும் வரலட்சுமி பூஜை!


வரலட்சுமி பூஜை

துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பூர்வ புண்ணியத்தால் கிடைத்த பலன்... அவர்களுக்கு பரதன் மகனாகப் பிறந்தான் என்கிறது புராணம். பரதனின் பிறப்பு ஐஸ்வர்ய கடாட்சத்துடன் மகாலக்ஷ்மியின் பேரருளால் அமைந்தது என்கிறது சகுந்தலையின் புராணம்.

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலை. ஒருநாள்... வனத்தில் உள்ள ஆஸ்ரமத்தில் பூவை பந்தாக்கி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வேட்டையாட வந்தான் துஷ்யந்தன் எனும் மன்னன். சகுந்தலையைக் கண்டான். காதல் கொண்டான். காந்தர்வத் திருமணம் நிகழ்ந்தது.

ஒருமுறை, தன்னையே மறந்த சகுந்தலை, துஷ்யந்தனின் நினைவாகவே இருந்தாள். கோபத்துக்குப் பேர்பெற்ற துர்வாச முனிவர், ஆஸ்ரமத்துக்கு வந்தார். அவர் வந்ததைக் கூட அறியாமல், துஷ்யந்தனின் நினைப்பிலேயே மூழ்கிப் போயிருந்தாள் சகுந்தலை.

எடுத்ததற்கெல்லாம் பொசுக்கென கோபப்படும் துர்வாசர், ’வந்திருக்கும் என்னை வரவேற்கவில்லையே...’ என்று இன்னும் ஆவேசம் கொண்டார். சகுந்தலையைப் பார்த்து கண்கள் விரிய சாபமிட்டார். ‘துஷ்யந்தன், உன்னை மறந்து போகட்டும்’ என்று சபித்தார். விளைவு, கர்ப்பமான நிலையில் இருந்த சகுந்தலையை மறந்தேபோனான் துஷ்யந்தன். பிறகு, சகுந்தலைக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரதன் எனப் பெயரிட்டாள்.

அந்த வனத்தில், சிங்கங்களுடனும் சிறுத்தைகளுடனும் யானைகளுடனும் மான்களுடனும் பயமின்றி ஓடியாடி விளையாடினான் பரதன். பிறகு, ஒருகட்டத்தில்... துர்வாசரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றாள் சகுந்தலை. மகன் பரதனுடன் சென்று, துஷ்யந்தனுடன் செல்வ கடாட்சத்துடன் வாழ்ந்தாள் என்கிறது புராணம்.

‘‘உன் மகன் பரதன், லக்ஷ்மியின் பேரருளைப் பெற்றவன். எதிர்காலத்தில் மாபெரும் சக்கரவர்த்தியாக, மாமன்னனாகத் திகழ்வான். இவனுடைய பெயரால், இந்த பூமி அழைக்கப்படும்‘‘ என அசரீரி கேட்டது. அதன்படி, நம் அன்னைபூமிக்கு, பரத கண்டம் எனப் பெயர் பின்னாளில் அமைந்தது. இந்தப் பரதக் கண்டம் முழுவதும் லக்ஷ்மி தேவியானவள், வாசம் செய்து, ஆட்சி செய்கிறாள் என்பதாக ஐதீகம்!

அத்தனை மகிமை மிக்க லக்ஷ்மியைத்தான், வரலக்ஷ்மி விரதம் எனும் பெயரில், பூஜை செய்து வழிபடுகிறோம். அகிலத்துக்கே படியளக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி, நம் வீட்டுக்கு வாசம் செய்ய அவளை அன்புடனும் பக்தியுடனும் அழைக்கிற நன்னாள் வரலட்சுமி பூஜைத் திருநாள்.

வரலட்சுமி பூஜையை ஆத்மார்த்தமாகவும் நிறைவாகவும் செய்து, லக்ஷ்மிதேவியை வழிபட்டால், நம் குழந்தைகள் சீரும் சிறப்புமாக இருப்பார்கள்; கல்வி கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; நம் சந்ததி சிறக்கும் செழிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று ஆகஸ்ட் 5-ம் தேதி வரலட்சுமி பூஜை. இந்தநாளில், வீட்டில் வரலட்சுமி பூஜை இருக்கலாம். அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று மகாலக்ஷ்மியை கண்ணாரத் தரிசித்து மனதார வழிபடுங்கள். குபேர யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்!

x