சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் ஜூலை 23-ல் ஆடித் திருவிழா தொடக்கம்


சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் கோப்புப் படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் முக்கிய பண்டிகையான ஆடித்திருவிழாவானது, பூச்சாட்டுதலுடன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் நடைபெறும் முதல் ஆடித் திருவிழாவாக அமைவதால், பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகரின் காவல் தெய்வம் என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடித்திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்நிலையில், நடப்பாண்டு ஆடித் திருவிழா வரும் 23-ம் தேதி பூச்சாட்டுதலுடனும், மறுநாள் 24ம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு வரும் 7-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, அன்று காலை கோட்டை பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, காலை 7,45 மணி முதல் 8.45 மணிக்குள் முகூர்த்தக் கால் நடுதலும், மகா தீபாராதனையும் நடைபெறவுள்ளது. கம்பம் நடுதல் வரும் 30ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7 மணிக்கு சக்தி அழைத்தல் உற்சவமும், மறுநாள் 6-ம் தேதியன்று, காலை 8 மணிக்கு சக்தி கரகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆடித்திருவிழாவின் முக்கிய உற்சவமான பொங்கல் மற்றும் உருளுதண்டம் வழிபாடுகள், ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை என 3 நாட்களுக்கு தொடந்து நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10ம் தேதியன்று அதிகாலையில் கம்பத்தை கங்கையில் சேர்க்கும் (நீரில் விடுதல்) உற்சவம் நடைபெறுகிறது. மறுநாள் 11ம் தேதி இரவு 8 மணிக்கு சப்தாபரணம் உற்சவம் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 12ம் தேதி காலை 10 மணியளவில், பெரிய மாரியம்மனுக்கு வசந்த உற்சவம் (மஞ்சள் நீராடுதல்) நடைபெறும். ஆகஸ்ட் 13-ம் தேதியன்று, காலை 10 மணிக்கு பால்குட விழா மற்றும் பெரிய மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெறவுள்ளன. கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் ஆடித்திருவிழாவின்போது, சேலம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

அவ்வளவு சிறப்பான திருவிழா, கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் காரணமாக, உருளுதண்டம் உள்பட சில முக்கிய வழிபாடுகள் இன்றி 8 ஆண்டுகளாக எளிமையாக நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், வரக்கூடிய முதல் ஆடித்திருவிழாவாக இது அமைந்துள்ளதால், பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

x