மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலய தேர் பவனி


மதுரை: மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு இன்று தேர் பவனி நடைபெற்றது.

மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா ஜூன் 21-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் இருந்துகொடி பவனியாக எடுத்துவரப்பட்டு கொடிமரத்தில் ரட்சகர் சபையின் பெங்களூரு மறை மாநில தலைவர் அருட்தந்தை ஜான் மேத்யூ கொடியேற்றி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினார்.

தினமும் மாலையில் ஜெபமாலை வழிபாடு, திருவிழா திருப்பலியும் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வுகளாக 23-ம் தேதி குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வில் அருட்தந்தை அலெக்ஸ் ஞானராஜ் திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கினார்.

26-ம் தேதி மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றி குழந்தைகளுக்கு உறுதி பூசுதல் வழங்கும் நிகழ்வை நடத்தினார். அதனையொட்டி திருவிழா திருப்பலியை சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் தேர் பவனியை துவங்கி வைத்து சிறப்புத்திருப்பலி நிறைவேற்றினார்.

30-ம் தேதி காலை திருப்பலி, அன்பின் விருந்து நடைபெற்று கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். பங்குத்தந்தை அருள் சேகர் தலைமையில் பக்த சபையினர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.