ஆதி யோகி, தியானலிங்க வளாகங்கள் பராமரிப்பு பணிக்காக ஜூன் 27-ல் மூடல்


கோவை: கோவை ஆலாந்துறையை அடுத்து பூண்டி அருகே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்க பைரவி மற்றும் 112 அடி உயரத்தில் அமைந்துள்ள ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் வரும் 27ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என ஈஷா யோகா மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட அறிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த அடிப்படையில் நாளை மறுநாள் (27-ம் தேதி) ஒரு நாள் மட்டும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும். இதனால், அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மறுநாள் 28-ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.