கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் பெட்டிக் காளியம்மன் பல்லக்கு வீதியுலா: பக்தர்கள் தரிசனம்  


கும்பகோணம்: கொரநாட்டு கருப்பூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் பெட்டிக் காளியம்மன் பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் வட்டம், கொரநாட்டு கருப்பூரில் பழமையான சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், பல ஆண்டுகளுக்கு முன்பு இடுப்புக்கு மேலே சிரசு வரையிலான உருவத்துடன் காவிரி ஆற்றில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் காளியம்மன் சிலை பெட்டியில் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெட்டிக் காளியம்மன் பல்லக்கு வீதியுலா புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, 2021-ம் ஆண்டு ஜூன்-ல் கோயிலில் பெட்டிக் காளியம்மன் நடைபெற்றது. நிகழாண்டு பல்லக்கு வீதியுலா புறப்பாடு இன்று நடந்தது. இதையொட்டி, மதியம் 2.30 மணிக்கு பன்னாங்கு வெல்வெட் பல்லக்கில் பெட்டிக் காளியம்மன் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தக் கோயில் இருந்து பல்லக்கு வீதியுலா புறப்பட்டு, சுற்றுப் பகுதிகளுக்கு சென்று விட்டு, எங்கும் நிற்காமல் முன்னோட்டம் பின்னோட்டமாக மீண்டும் மாலையில் கோயிலுக்கு சென்று அடைந்தது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கொரநாட்டு கருப்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.