பங்குனி உத்திர விழாவில் பங்கேற்கும் முஸ்லிம் மக்கள்


சமீப ஆண்டுகளாக இந்து, முஸ்லிம் மக்களிடையே மத துவேசம் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு சம்பங்களை உதாரணமாக கூற முடியும். கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுபோல் கடந்த சில தினங்களுக்கு வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி திரைப்படம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் இத்திரைப்பட்டத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வந்தாலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் எனும் கிராமத்தில் கடந்த 118 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெறும் இந்து, முஸ்லிம் மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த 9-ம் தேதி தொடங்கி இன்றுடன் (மார்ச் 21) நிறைவு பெற்றது. விழாவின் கடைசி நாளில் இந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று கூடி சந்தனம் பூசிக் கொள்ளும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இதன்படி ராசிபுரம் கிழக்கு தெரு பள்ளி வாசலைச் சேர்ந்த டி.கே.உஷேன் தலைமையில் முஸ்லிம் மக்கள் குருசாமிபாளையம் வந்தனர். தொடர்ந்து அங்குள்ள சிவசுப்ரமணியர் கோயிலில் இருந்து வெள்ளை கொடி ஏந்தி, மேளம் வாத்தியம் முழங்க அங்குள்ள குடியிருப்பு மற்றும் கடைகளின் சுவர்களில் முஸ்லிம் மக்கள் சந்தனத்தை பூசினர். பின்னர், கோயில் அருகே செங்குந்தர் பாவடி மைதானத்தில் உள்ள சென்டா மரத்தில் (புளிய மரம்) வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஊர் பெரியதனக்காரர் ராஜேந்திரன் கைகளில் டி. கே. உஷேன் சந்தனம் பூசினார். பதிலுக்கு உசேன் கைகளில் ராஜேந்திரன் சந்தனம் பூசினார். இதைத்தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் பூ மாலையை மாற்றிக் கொண்டனர். பின், பா்த்தியா ஓதிய முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மக்களுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த பொட்டுக் கடலையை வழங்கினர். இதைத்தொடர்ந்து இந்து மக்கள், முஸ்லிம் மக்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பு செய்தனர்.

இதுகுறித்து குருசாமிபாளையம் மக்கள் கூறுகையில், "குருசாமிபாளையம் பகுதியில், கைத்தறி நெசவு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தொழிலுக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை ராசிபுரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இச்சூழலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் ஃபிளேக் நோயால் கிராம மக்கள் மக்கள் பாதிபிற்குள்ளாகினர். அப்போது, முஸ்லிம் பெரியவர்கள், சென்டா மரம் என அழைக்கப்படும் புளிய மரத்தின் கீழ் நின்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு பாத்தியா ஓதி பொட்டுக் கடலை மற்றும் நாட்டு சர்க்கரை கொடுத்தனர். அதனால் நோய் குணமானதாக முன்னோர்கள் தெரிவிப்பர்.

அது முதல் முஸ்லிம் மக்களுக்கு மரியாதை செய்யும் வகையில் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் குருசாமிபாளையம் ஊர் பெரியவர்கள், ராசிபுரம் அச்சு கட்டித்தெரு கிழக்கு பள்ளிவாசலுக்கு தேங்காய் பழம் தட்டுடன் சென்று திருவிழாவுக்கு அழைப்பு விடுப்பர். அதையடுத்து அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனம் பூசிக் கொள்வர். இந்த விழா 118 ஆண்டுகளாக நடைபெறுகிறது" என்றனர்.

x