நரசிம்ம மூர்த்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் யானை அணிவகுப்பு நேர்ச்சை


ஆனையடி பூரம்

கேரளாவின் பிரசித்திபெற்ற ஆனையடி நரசிம்ம மூர்த்தி கோயிலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் யானை அணிவகுப்பு நேர்ச்சையான ‘கஜ மேளா’வுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த மாதம் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் துலாபார நேர்ச்சை செலுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது கஜ மேளாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரிலேயே நேர்ச்சைத் தொகை கட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆனையடி பகுதியில் நரசிம்ம மூர்த்தி கோயில் உள்ளது. ஆனையடி என்ற சொல்லுக்கு யானையின் கால்தடம் என்று அர்த்தம். மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம மூர்த்தியை மூலவராகக் கொண்ட கோயில் இது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இங்கு நடக்கும் ஆனையடி பூரத்தின் மைய நிகழ்வான ‘கஜ மேளா’ மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவில், விநாயகரின் திருவுருவாகப் பார்க்கப்படும் யானைகளை வணங்கி மரியாதை செய்து, யானைகள் அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இந்த அணிவகுப்பில் 80 யானைகள் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு கரோனா கால நடைமுறைகளைப் பின்பற்றி 10 யானைகள் மட்டுமே பங்கேற்கின்றன.

இதில் யானைகள் பங்கேற்புக் கட்டணத்தை பக்தர்கள் தங்கள் பெயரில் கட்டுவார்கள். இந்த ஆண்டுக்கான கஜமேளா நிகழ்ச்சி வரும் ஜன.31 அன்று நடக்க இருக்கிறது. இதில் 6-வது யானைக்கான கட்டணம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் கட்டப்பட்டுள்ளது. இதற்கென ரூ.9,000 கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள், நரசிங்க மூர்த்தி கோயிலின் சார்பில் அச்சடித்து விநியோகிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரலிலும் இடம்பெற்றுள்ளன.

இவைகுறித்து கோயில் அறக்கட்டளைத் தலைவர் வேணுகோபால் கூறும்போது, ‘‘கடந்த மாதம் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. அதில் பேசியவர் யானை அணிவகுப்புக்கு பணம் கட்டுவதற்கான விதிமுறைகள் குறித்துக் கேட்டார். அப்போதே மு.க.ஸ்டாலின் பெயரில் யானை நேர்ச்சை செய்ய வேண்டும் என்றார்கள். நாங்கள் யாரோ விளையாட்டாகப் பேசுகிறார்கள் என்று நினைத்தோம். ஒருவாரத்துக்குப் பின், இருவர் நேரில் வந்து பணம் கட்டினார்கள். அதிலும் யானை அணிவகுப்பில் ஆறாவது யானைதான் வேண்டும் எனக் கேட்டு அதற்கே பணம் கட்டினார்கள்’’ என்றார்.

கடந்த டிச.17 அன்று குருவாயூர் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், ரூ.9,200 தொகையை தானே கோயில் அலுவலகத்தில் செலுத்தி, துலாபார நேர்ச்சை செய்தார். அவரது எடைக்குச் சமமான நாட்டுச் சர்க்கரையை கோயிலுக்கு வழங்கினார். அதேபோல் சுற்றுவிளக்குகளை எரியச் செய்வதற்காக, இணைய வழியில் முன்னரே ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தியிருந்தார். மேலும், துர்கா ஸ்டாலின் நேரடியாக வந்திருந்து இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

துர்கா ஸ்டாலின் துலாபார நேர்ச்சை (கோப்பு படம்)

ஆனால், இப்போது முதல்வர் பெயரில் ஆனையடி பகுதியில் வசிக்கும் சுலதா என்னும் பெண், தமிழகத்தில் இருக்கும் தன் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்போடு ரு.9,000 ஆயிரம் நேர்த்திக்கடனுக்காகக் கட்டியுள்ளார். இவர் முதல்வர் குடும்பத்தினருக்கு தெரிந்துதான் ‘மு.க.ஸ்டாலின்’ பெயரில் பணம் கட்டினாரா அல்லது மு.க.ஸ்டாலின் மீது கொண்ட அன்பால் நேர்ச்சைக்கு பணம் கட்டியுள்ளாரா என்ற விவரங்கள் தெரியவில்லை.

பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்ட திமுகவின் தலைவர் பெயரிலேயே ‘நேர்ச்சைக்கடன்’ செலுத்தும் அளவுக்கு, காலச்சூழல் மாறியிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்!

x