திண்டுக்கல் - நத்தம் அருகே கருப்பசாமி கோயிலில் புரவி எடுப்பு திருவிழா


நத்தம் அருகே இடையபட்டியில் நடந்த கோயில் திருவிழாவில் ஊர்வலமாக சுவாமி சிலைகளுடன் புரவி எடுத்து வந்த பக்தர்கள்.

நத்தம்: நத்தம் அருகே கருப்பசாமி, வேட்டை வீரன் சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இடையபட்டியில் உள்ள கருப்பசாமி, வேட்டை வீரன் சுவாமி கோயில்களில் புரவி எடுப்பு திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் துவக்கமாக அழகர்மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவை முன்னிட்டி தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு வைபவம் இன்று இடையபட்டியில் நடைபெற்றது.

இதற்காக வத்திபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருப்பசாமி, வேட்டை வீரன்சாமி கண் திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சுவாமி சிலைகள் அனைத்தும் வர்ணக்குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் வான வேடிக்கைகளோடு வத்திபட்டியில் இருந்து ஊர்வலமாக இடையபட்டி கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. புரவி எடுப்பு விழா நிகழ்ச்சியில் இடையபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.