எளிய வழிபாடு


மன அமைதிக்கு இறை வழிபாடு இனிமையானதாகக் கருதப்படுகிறது. இறைவனை எப்படி வழிபட வேண்டும்? என்பது குறித்து, 15 எளிய வழிகள் கூறப்பட்டுள்ளன.

தினமும் இறைவனது உருவத்தைப் பார்க்க வேண்டும் (இல்லத்தில் போட்டோ பார்க்கலாம்). கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். அவன் கதை கேட்கலாம். அவன் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தலாம். அவனது பொருளை (சங்கு, சக்கரம், துளசி, ருத்ராட்சம்) வணங்கலாம். ஆழ்வார் பாசுரம், சிவ ஸ்லோகம் சொல்லலாம். அவன் ஸ்தலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் பிரசாதம் படைக்கலாம். அவன் அவதாரம் / திருவிளையாடல்களை நினைத்துக் கொள்ளலாம்.

அவன் நாமா கூறலாம். தாயார் / அம்பாள் பெயரைச் சொல்லலாம். பக்தி காட்டிய ஹனுமன், சபரி, விபீஷணன், பரதன், யசோதா, பிரகலாதன், கஜேந்திரன் ஆகியோரை நினைத்துக் கொள்ளலாம். ஆழ்வார் / நாயன்மாரை நினைத்துக் கொள்ளலாம்.

ஆச்சாரியர் / குருநாதரை நினைத்துக் கொள்ளலாம். பகவத் கீதை, நாலாயிர திவ்ய பிரபந்தம், பன்னிரு திருமுறை ஆகிய ஆன்மிக நூல்களை வணங்கலாம். ஆச்சாரியர் ராமானுஜர், தேசிகர் அருளிய ஸ்தோத்திரங்களைக் கூறலாம்.

அவ்வளவுதான். சில நொடிகள் இறைவனையும் அவன் சார்ந்த விஷயங்களையும் நினைவுகூர்ந்துவிட்டுச் செயல்களைத் தொடங்கினால் எல்லாம் சுபமே.

சின்னச் சின்ன சேவைகள் மூலம் பக்தியை வளர்க்கலாம். நாம சங்கீர்த்தனம் செய்யும் பாகவதர்களுக்கு உதவி புரியலாம். நம்மால் முடிந்த உதவிகளை (பணமாகவோ, பொருளாகவோ, உணவாகவோ) அளிக்கலாம். ‘பாகவத சேவை பாப விமோசனம்’ என்பது ஆன்றோர் வாக்கு.

எளிய வழிபாட்டால் மன அமைதி பெறுவோம்.

x