திருச்செந்தூரில் அறுபடை வீடு ஆன்மிக பயணம் தொடக்கம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து இன்று காலை அறுபடை வீடு ஆன்மீக பயணம் புறப்பட்ட பக்தர்கள்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து அறுபடை வீடு ஆன்மிக பயணம் இன்று காலை தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 202 பக்தர்கள் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் அறுபடை வீடு ஆன்மிக பயணத்திட்டத்தின் கீழ் 60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர். அவர்களுக்கு தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை இலவமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூன்றாம் கட்டமாக திருச்செந்தூரில் இருந்து அறுபடை வீடு ஆன்மிக பயணம் இன்று காலை தொடங்கியது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 202 பக்தர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் உட்பட 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இதனை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயிலில் மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் இருந்து ஆன்மிக பயணம் புறப்பட்டது. ஆன்மிக பயணத்தை திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், அறங்காவலர்கள் கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் அந்தோணிரூமன், சுதாகர், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் பயணத்தில் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு, வரும் 10-ம் தேதி பக்தர்கள் ஊருக்குத் திரும்புகினறனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.