மருதமலையில் திரியும் காட்டுப் பன்றிகள்


சாலையை கடக்கும் காட்டுப் பன்றிகள்

கோவைக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆன்மிக தலமான மருதமலை. பக்தர்கள் வருகையால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதி, அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இருப்பதால், காட்டு யானைகள் உட்பட பல வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகவும் உள்ளது.

குறிப்பாக காட்டு யானைகள் மருதமலையைச் சுற்றியுள்ள பாரதியார் பல்கலை, சோமையனூர், தடாகம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவி அங்குள்ள விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் சேதப்படுத்துவது தொடர்கிறது. கடந்த சில வருடங்களாக கோயில் படிக்கட்டுகளிலேயே காட்டு யானைகள் வந்து நின்று கொள்வதும், படியேறும் பக்தர்கள் அலறி ஓட்டம் பிடிப்பதும், யானைகளை வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டியடிப்பதும் நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது இதே மருதமலையில் காட்டுப் பன்றிகள் தொல்லையும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘முன்பெல்லாம் எங்கோ ஒன்றிரண்டு காட்டுப் பன்றிகள்தான் திரியும். நாங்க காட்டுக்குள்ளே சீமார் புல், நெல்லிக்காய், கடுக்காய், தேன் எடுக்கப்போகும்போதுதான் அதை பார்ப்போம். காட்டு யானை கூட நம்ம பேசாம அசையாம நின்னுட்டா, அது பாட்டுக்கு போயிடும். ஆனா இது அப்படியில்ல. எகிறிப் பாய்ஞ்சுடும். அதனால ஒண்ணு ரெண்டு காட்டுப் பன்றி நின்னாக்கூட அந்த வழியில திரும்பப் போகமாட்டோம். இப்ப எங்கே பார்த்தாலும் பத்திருபது காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமா திரியது. அதுவும் பட்டப்பகல்ல, சாயங்காலத்துல, காலையில வெடிஞ்சு ஒன்பது மணிக்கு கூட கோயில் படிக்கட்டுலயே வந்து நிற்குது. அதைத் தாண்டி நாங்க வேலை வெட்டிக்கு கூட போக முடியலை. சாயங்காலம் அடிவாரத்திலிருக்கும் ஸ்கூலிலிருந்து பிள்ளைகளும் திரும்பிவர முடியலை. படிக்கட்டு வழியில போனா அதுல, அதுல மாறி தார்ச்சாலையில (மலைப்பாதை) போனா அதிலும் மாறி, மாறி வந்துடுது. அதுவும் ஒன்று ரெண்டு பன்றிகள் இல்லை. குறைஞ்சது பத்து, இருபது குறுக்கே நின்னுக்குது. மீறிப் போனா ஆள் மேல பாய்ஞ்சுடும். அதை விரட்ட வனத் துறை அதிகாரிகள்கிட்ட சொல்லியாச்சு. நடவடிக்கைதான் இல்லை!’ என்றனர், மருதமலை மீது அமைந்துள்ள குடியிருப்புகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள்.

மலை அடிவாரப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் கூறும்போது, ‘முந்தியெல்லாம் இப்படியில்லை. இப்ப ஒண்ணு ரெண்டு வருஷமாத்தான் கடைக்கு பக்கத்துலயே வந்துடுது. கடையில் உணவுப்பண்டங்கள் எது இருந்தாலும் விடறதில்லை. கூரை சாலைக்கடைகளுக்குள் புகுந்து அதையும் சாப்பிட்டு விடுகிறது!’ என தெரிவித்தனர்.

இதே அடிவாரத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு அருகாமையில், ‘சுற்றிலும் உள்ள ஓட்டல் கழிவுகளை எல்லாம் கொட்டுகிறார்கள். அதைச் சாப்பிட இரவு நேரங்களில் எல்லாம் படையெடுத்து விடுகிறதாம். காலையில் விடிந்த பின்பும் கூட அவை நகருவதேயில்லை. அதையும் மீறி விரட்டினால் உறுமிக் கொண்டு நம் மீதே பாய்ந்து விடுகின்றன!’ என குறிப்பிட்டனர் அங்குள்ளவர்கள்.

இதை அறநிலையத் துறை மற்றும் வனத் துறையினர் கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே மருதமலைக்கு வரும் பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

x