சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதி வைகாசி திருவிழா தேரோட்டம்


சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் இன்று வைகாசி தேரோட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதியில் 11 நாள் வைகாசி திருவிழா கடந்த 24ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் மதியம் வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவில் அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதலும் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி, மற்றும் அய்யாவழி சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது.

8ம் திருவிழாவான 31ந் தேதி மாலை அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடுதல், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு ஆகியவை நடைபெற்றது.

10ம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திர விமான வாகன பவனி நடைபெற்றது. விழா நிறைவு நாளான இன்று(ஜூன் 3ந் தேதி) மதியம் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது..

அப்போது காவி தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் அய்யா... அரகர... சிவசிவா என்ற பக்தி கோஷத்தை முழங்கினர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.