நேப்பியர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி.
நேப்பியர் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 111 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் விளாசினார். டேரில் மிட்செல் 84 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் முகமது அப்பாஸ் 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் பந்துவீச்சில் இர்பான் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அகிப் ஜாவேத், ஹாரிஸ் ரஃவூப் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
345 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபர் அஸம் 83 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், சல்மான் ஆகா 48 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்ககளான உஸ்மான் கான் 39, அப்துல்லா ஷபிக் 36 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் நேதன் ஸ்மித் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் தனது கடைசி 7 விக்கெட்களை 22 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. ஆட்ட நாயகனாக மார்க் சாப்மேன் தேர்வானார். 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்டம் கண்டது.
24 பந்தில் அரை சதம் விளாசி சாதனை: நியூஸிலாந்து அணியில் அறிமுக வீரராக இடம் பெற்றிருந்த பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட முகமது அப்பாஸ் 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைந்தார் முகமது அப்பாஸ். இதற்கு முன்னர் இந்தியாவின் கிருணல் பாண்டியா 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கி 26 பந்துகளில் அரை சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் முகமது அப்பாஸ்.