சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் நகரில் கடும் வாகன நெரிசல் - புதுச்சேரி மக்கள் தவிப்பு


புதுச்சேரி: சுற்றுலா பயணிகள் வருகை உயர்ந்து, நகருக்குள் அதிகரிக்கும்வாகன நெரிசலால் மக்கள் தவிக்கிறனர். புதுச்சேரி அரசு இதில் என்னசெய்யபோகிறது என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். புதுச்சேரியில் வசிப்போரிடம் வாகன எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இதற்கிடையே வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்குள் வரும் சுற்றுலா பயணிகளின் எண் ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் விடுமுறை தினங்களில் புதுச்சேரி மக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசலில் இருந்து மக்களைக் காக்க அரசுஎடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக சுற்றுலா மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, “வாகன நெரிசல் அதிகரிப்பதால், பொதுப்பணித்துறை, உள்துறை, போக்குவரத்து துறை இணைந்து கூட்டம் நடத்த உள்ளோம். சாலை விரிவாக்கம், வாகன நிறுத்தம் சாலையின் இருபக்கம் இருப்பின் அளவை மாற்றுதல், நடைபாதை கடை பிரச்சினை ஆகியவை பற்றி இதில் முக்கிய முடிவுகள் எடுப்போம்.

நடைபாதை கடைகளை எடுத்தால் அவர்களுக்கான மறுவாழ்வு முடிவு செய்யப்படும். தேவையில்லாத நடைபாதைகளை மிஷன் வீதி, அண்ணாசாலை, புஸ்ஸி வீதி, புல்வார் பகுதிகளில் எடுத்து அங்கு வாகன நிறுத்தத்துக்கு பயன்படுத்த உள்ளோம். இதனால் வாகன நெரிசல் குறையும்.

சாலைகளில் ‘ப்ரீ லெப்ட்’ எனப்படும் இடதுபக்கம் திரும்புவதில் பிரச்சினையாக உள்ளது. அங்கு கடைகளும், ஆட்டோ நிறுத்தமும் அமைந்துள்ளது. அதை சரிசெய்ய உள்ளோம். பழைய சிறை சாலை, பெரியவாய்க்கால் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

பாரம்பரிய நகராக புதுச்சேரி இருப்பதால், போக்குவரத்து நெரிசலை தீர்க்க நகரத்துக்குள் மேம் பாலம் அமைக்க இயலாது. சண்டேமார்க்கெட் போல் பெரியவாய்க் கால் பகுதியில் மேல் அடுக்கில் கடைகளை ஒரே வரிசையில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான வடிவமைப்புக்கு திட்டமிட்டு வருகிறோம்.

சிவாஜி சிலையில் இருந்து ராஜீவ்காந்தி சிலை வரை பாலம் அமைக்க அனுப்பியிருந்த கோப்பு, மக்கள் தொகை அடிப்படையில் நிறைவேற்ற தாமதமாகிறது.

தற்போது ராஜீவ்காந்தி - இந்தி ராகாந்தி சிலைகள் வரையிலோ, ராஜீவ்காந்தி சிலை முதல் மரப்பாலம் வரையிலோ பாலம் அமைக்க கோரியுள்ளோம். இரண்டு அடுக்கு பாலமோ, சாதாரண பாலமோ அமைக்க, அதற்கான நிதி தருமாறு கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

x