நிறைவடையாத பணிகள் - புதுச்சேரியின் புதிய பேருந்து நிலையத்தை இம்மாதமே பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்!


ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், கட்டப்பட்டு வரும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம். | படங்கள்: எம்.சாம்ராஜ் |

தற்காலிக பேருந்து நிலையத்தால் தொடரும் பாதிப்பால், பணிகள் நிறைவடையாவிட்டாலும் இம்மாதமே புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்காக பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. சிதிலமடைந்த இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை முழுவதும் இடித்து விட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ. 29 கோடியில் வணிக வளாகத்துடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2023 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி இதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக, பேருந்து நிலைய மைய பகுதியில் இரும்புத் தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. அந்தச் சூழலில் பேருந்துகள் வழக்கம் போல் சென்று வந்தன. இதனால் பேருந்து நிலையம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. இதற்கிடையே பேருந்து நிலைய பகுதிகளில் கடை வைத்திருப்பவர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்கள் இந்த கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டன.

பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வந்ததால் இப்பணிகள் தொய்வடைந்தன. தேர்தல் முடிவு வெளியான பிறகு கடந்த ஜூன் 16-ல் புதிய பேருந்து நிலையத்தை ஏஎப்டி திடலுக்கு மாற்றி விட்டு, கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்தன.

ஏஎப்டி திடலில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒருநாள் மழை பெய்தாலே, இப்பகுதி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி விரைவுப்படுத்தப்பட்டு நடந்து வருகிறது.

தற்போதைய நிலை குறித்து விசாரித்த போது, “சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு அலுவலகம், போக்குவரத்து அலுவலகம், விசாரணை அலுவலகம், சிசிடிவி கண்காணிப்பு அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, 3 காத்திருப்பு அறைகள், ஒரு ஏசி வசதி காத்திருப்பு அறை, மின்சார அறை, காப்பக அறை, ஏடிஎம் வசதி, சுத்திகரிப்பு குடிநீர் வசதி ஆகியவற்றுடன் மொத்தம் 31 கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டு, அவற்றுக்கு ஷெட்டர் போடப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த 31 கடைகளில், ஏற்கெனவே கடை வைத்திருந்த 16 பேருக்கு முதலில் தரப்படும். மீதமுள்ள 15 கடைகள் நகராட்சி மூலம் புதிய நபருக்கு வாடகைக்கு விடப்படும். முன்பு பேருந்து நிலையத்தில் 32 பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதி இருந்தது. தற்போது 46 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், பயணிகள் சிரமமின்றி பேருந்துகளில் ஏறி செல்லும் வகையில் சென்னை உள்ளிட்ட வெளியூர்பேருந்துகள், நகர பேருந்துகள் நிற்கும் இடங் களில் தனித்தனியாக அறிவிப்பு பலகைகளும் வைக்கப் படவுள்ளது. பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் 26 கார்கள், 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பெரிய அளவில் பார்க்கிங் வசதியும் அமைக்கப்படுகிறது.

இதுதவிர, 30 ஆட்டோ, டெம்போ, டாக்ஸிகளை நிறுத்துவதற்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வருவதற்கும், செல்வதற்கும் என இரண்டு வழிகள், பொதுமக்கள் வருவதற்கு மைய பகுதியில் தனியாக ஒரு வழி என 3 வழிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடையும் நிலையிலுள்ளது" என்று தெரிவித்தனர்.

‘ஸ்மார்ட் சிட்டி’ மற்றும் நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு, "பொதுமக்கள் நலனுக்காக அக்டோபர் மாதமே புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள், பேருந்துகள் நிற்கும் பகுதி, கடைகள் திறந்து செயல்படுவதற்கு தேவையான பணிகள் முழுவேகமாக நடந்து வருகிறது.

பணிகள் முழுமையடையாவிட்டாலும் பேருந்து நிலையத்தை இம்மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டு, மீதமுள்ள பணிகளை தொடர்ந்து செய்து முடிக்க திட்டமிட்டு வருகிறோம்.

இதுதொடர்பாக முறையாக அரசுக்கு தெரிவிக்கி றோம். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் தேதியை அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தனர்.

x