மேலும் நெருங்கும் மாலத்தீவு... இந்தியாவின் ‘ரூபே’ சேவையை அறிமுகம் செய்கிறது


ரூபே

இந்தியாவுடன் மேலும் நெருங்கும் வகையில், மாலத்தீவுகள் தேசத்தில் இந்தியாவின் ரூபே சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவுகளில் கொந்தளிப்பு நிலவியபோதும், பல்வேறு காரணிகளை முன்வைத்து மாலத்தீவு இந்தியாவை நெருங்கி வருகிறது. அவற்றில் ஒன்றாக விரைவில் இந்தியாவின் ரூபே சேவையைத் அங்கே அறிமுகம் செய்கிறது. இந்திய தயாரிப்பான ரூபே(RuPay), நாடு நெடுக உள்ள ஏடிஎம்கள், பிஓஎஸ் சாதனங்கள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் பரவலான ஏற்றுக்கொள்ளப்பட்டது, இப்போது மாலத்தீவுகளிலும் கால்பதிக்க உள்ளது.

மாலத்தீவு

பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத், இந்தியா மற்றும் சீனா ஆகிய தேசங்கள் மாலத்தீவுகளின் உள்ளூர் நாணயத்தை எவ்வாறு பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கும் போது, ​​இந்தியாவின் ரூபேயின் மாலத்தீவு அறிமுகம் குறித்தும் தெரிவித்தார்.

"இந்தியாவின் ரூபே சேவையின் அறிமுகம், மாலத்தீவு ரூஃபியாவை மென்மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றும் சயீத் நம்பிக்கை தெரிவித்தார். "டாலர் பிரச்சினையை நிவர்த்தி செய்வதும், ரூஃபியாவை வலுப்படுத்துவதும் தற்போதைய மாலத்தீவு நிர்வாகத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்" என்றும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 2022-ல் அப்போதைய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் அதிகாரப்பூர்வ இந்திய வருகையின் போது வெளியான இந்தியா-மாலத்தீவு கூட்டு அறிக்கை இதனை உறுதிபடுத்தி இருந்தது. இருநாட்டுத் தலைவர்களும் மாலத்தீவில் ரூபே கார்டுகளின் பயன்பாட்டை செயல்படுத்துவதற்கான தற்போதைய பணியை வரவேற்றனர். மேலும் இருதரப்பு பயணம், சுற்றுலா மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தவும், தொடர் நடவடிக்கைகளை பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டனர்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் மோடி

கடந்த நவம்பரில் சீனாவுக்கு ஆதரவான அதிபர் முகமது முய்ஸு பதவியேற்றதில் இருந்து, மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விளைந்தது. அவரது ஆட்சியின் வற்புறுத்தலின் பேரில் மாலத்தீவுகளில் இருந்து மூன்று விமான தளங்களில் பணிபுரியும் 80-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இம்மாத தொடக்கத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக பிரதமர் மோடியை சமூக ஊடகங்களில் இழிபடுத்தியது தொடர்பாக மாலத்தீவுகளின் 3 அமைச்சர்கள் நீக்கத்துக்கு ஆளானார்கள்.

அதனைத் தொடர்ந்து பெருமளவு இந்தியர்கள் தங்களாது மாலத்தீவு சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர். சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் மாலதீவுகளின் பொருளாதாரம் இதனால் பெரும் அடிவாங்கியது. மேற்படி கசப்புகள் அப்படியே இருக்க, இந்தியாவை நெருங்கும் போக்கில் கிடப்பில் இருந்த நடவடிக்கைகளை மாலத்தீவு புதிய அரசு தூசு தட்டி வருகிறது. அவற்றில் ஒன்றாக ரூபே அறிமுகமும் சேர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

x