ரூ.2,10,874 கோடி டிவிடெண்ட்... இதுவரையில்லாத சாதனையாக மத்திய அரசுக்கு அள்ளித்தரும் ரிசர்வ் வங்கி


பிரதமர் மோடி ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி இதுவரையில்லாத டிவிடெண்ட் தொகையாக, ரூ2.11 லட்சம் கோடிகளை மத்திய அரசுக்கு இம்முறை வழங்க உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி 2023 - 2024ம் நிதியாண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகையை அரசுக்கு வழங்க உள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட இது இரு மடங்கு அதிகம் என்பதோடு, இதுவரையில்லாத சாதனை தொகையாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கரன்சி

இன்று கூடிய ரிசர்வ் வங்கியின் வாரிய கூட்டத்தில், உபரியை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்ததாக ரிசர்வ் வங்கியின் ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகையாக ரூ.1.02 லட்சம் கோடி வரவுசெலவுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

2022-23 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் ஈவுத்தொகை அல்லது உபரி பரிமாற்றம் ரூ87,416 கோடி ஆகும். அடுத்த நிதியாண்டியில் இதனைவிட சாதனை அளவாக ரூ2.11 கோடிக்கு ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் எகிறி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுவே உச்ச தொகையாகும். இதற்கு முந்தைய அதிகபட்சம் டிவிடெண்ட் 2018 -19 நிதியாண்டில் ரூ1.76 லட்சம் கோடியாக இருந்தது.

”கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் 608வது கூட்டத்தில் ஈவுத்தொகை வழங்குவது குறித்த முடிவு எடுக்கப்பட்டது. 2023-24ம் ஆண்டிற்கான உபரியாக ரூ.2,10,874 கோடியை மத்திய அரசுக்கு மாற்ற வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது ” என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சக்தி காந்த தாஸ்

நடப்பு நிதியாண்டில் , நிதிப் பற்றாக்குறை அல்லது செலவுக்கும் வருவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியை ரூ17.34 லட்சம் கோடியாக கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இதையொட்டி, வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் ஏற்படும் அபாயங்கள் உட்பட உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சூழ்நிலையையும் ரிசர்வ் வங்கி வாரியம் இந்தக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்தது.

x