2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் புத்துயிர் பெறும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
’நடப்பு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நிறைய ஆலோசனைகளை முடிக்க வேண்டியுள்ளது. இதில் முதன்மையாக வெளிப்படைத்தன்மையை தக்கவைத்துக்கொள்ள, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக கருப்புப் பணம் இதில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலுமாக நீக்கப்படும்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதில், ’உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோருவது தொடர்பாக மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை’ என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே, மறுபரிசீலனை மனுவா அல்லது திருத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய தேர்தல் பத்திரம் திட்டமா என்பதை மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை.
பொதுவெளியில் கடும் விமர்சனத்துக்கும், எதிர்க்கட்சிகளால் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தின் சில அம்சங்களில் மேம்பாடு தேவை என்பதை ஒப்புக்கொண்ட நிதியமைச்சர், நல்ல ஆலோசனைகளைத் தொடர்ந்து அவை ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார். ஆக, எந்த வகையில் பார்ப்பினும் பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை கைவிடுவதாக இல்லை.
முன்னதாக, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் ரொக்க நன்கொடைகளுக்கு மாற்றாகவும், அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்காகவும், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 2, 2018 அன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், பிப்ரவரி 2024-ல், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்து அதனை ரத்து செய்தது.