1,550 வணிக கட்டிடங்களை வீடுகளாக பதிந்து சொத்து வரி குறைப்பு - மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு


மதுரை: மதுரை மாநகராட்சியில் கடந்த காலங்களில் 1,550 வணிகவளாக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக பதிவு செய்து, சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகராட்சி பணியாளர்களுடைய இந்த அலட்சிய நடவடிக்கையால் மாநகராட்சிக்கு அரையாண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் ரூ.3.45 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வணிக கட்டிடங்கள். இந்த கட்டிங் களுக்கு மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தனித்தனி விகிதங்களில் சொத்து வரி நிர்ணயம் செய்கின்றனர்.

இதில், குடியிருப்புகளுக்கான சொத்து வரியை பொதுமக்கள், ஒரளவு முறையாக செலுத்தி விடுகின்றனர். ஆனால் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை, அதன் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு உரிய காலத்தில் செலுத்துவதில்லை.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு அரசியல் பின்னணியில் இருப்பதால் சொத்து வரி செலுத்துவதை தள்ளிப் போடுகிறார்கள். மாநகராட்சி நோட்டீஸ் விட்டு நடவடிக்கை எடுக்கும்போது, ஆளும்கட்சி, எதிர்கட்சி அரசியல் பிரமுகர்கள் மூலம் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

சிலர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, இதில் உத்தரவு ஏதும் பெறாத நிலையிலும் அந்த வழக்கை காரணம் காட்டி சொத்து வரி செலுத்துவதில்லை. மாநகராட்சி சட்டப்பிரிவு வழக்கறிஞர்களும் அந்த வழக்குகளை கையாண்டு, சொத்து வரி செலுத்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், மாநகராட்சி கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வந்தது.

மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல், நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சொத்து வரி அதிகம் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் பட்டியலை எடுத்து, அவர்கள் சொத்து வரியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

வழக்குகள் இருப்பதாக காரணம் சொல்லியவர்களை, மாநகராட்சி வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு அதே வழக்குகளை தூசி தட்டி மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து வரி கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தார். கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருந்த சில நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பதாக மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்ததும்,

தகவல் அறிந்த அந்நிறுவனத்தினர் உடனடியாக சொத்துவரி பாக்கியை செலுத்தினர். மாநகராட்சி ஆணையரின் இந்த தொடர் நடவடிக்கையால் தற்போது நிதி நெருக்கடியில் இருந்து மாநகராட்சி மீண்டு வருகிறது.

இந்நிலையில் சொத்து வரியை குறைத்து மதிப்பீடு செய்து நிர்ணயம் செய்த கட்டிடங்களையும் ஆய்வு செய்து, எந்த அரசியல் நெருக்கடிகளுக்கும் இடம் கொடுக்காமல் அதன் மீது கறாராக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது அடுத்தக்கட்டமாக ரேண்டமாக, மாநகராட்சி முக்கிய சாலைகளில் உள்ள வணிக கட்டிடங்களை ‘திடீர்’ ஆய்வு செய்து கட்டிடங்களை மறு அளவீடு செய்ய உத்தரவிட்டார்.

இந்த கட்டிடங்களின் தற்போதைய மறு அளவீடு, சொத்து வரி விதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட அளவீடுக்கு ஒத்துப் போகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுமார் 2,000 வணிக கட்டிடங்களை ஆய்வு செய்ததில், மாநகராட்சி அதிகாரி களே அதிர்ச்சியடையும் வகையில் அவற்றில் 1,550 கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக பதிவு செய்து மாநகராட்சி பணியாளர்கள் சொத்து வரியை மிகக் குறைவாக நிர்ணயம் செய்திருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த காலத்தில் சொத்துவரி நிர்ணயம் செய்தபோது செய்த அளவீடுக்கும், தற்போது மறுஆய்வின்போது செய்த அளவீடுக்கும் நிறைய வேறுபாடு இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. தற்போது இந்த கட்டிடங்களை குடியிருப்பு பட்டியலில் இருந்து வணிக கட்டிடத்துக்கு மாற்றி, மறு அளவீடுக்கு தகுந்தாற்போல், வணிக கட்டிட சொத்து வரி நிர்ணயம் செய்யவும், இதுவரை மாநகராட்சிக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் இழப்பையும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க ஆணை யர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். இத் தகைய ஆய்வு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ரூ.140 வரி ரூ.1.75 லட்சமானது; ரூ.3 ஆயிரம் ரூ.20 லட்சமானது: மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதற்கட்ட ஆய்வில் அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, அய்யர் பங்களா, பை-பாஸ் ரோடு, கோரிப்பாளையம் போன்ற நகரின் முக்கிய இடங்களில் உள்ள 1,550 வணிக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக பதிவு செய்து சொத்து வரி நிர்ணயம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டிடத்துக்கு 6 மாதங்களுக்கு சொத்து வரியாக ரூ.140 விதிக்கப்பட்டிருந்தது. இது சரியாக அளவிடப்பட்டு தற்போது ரூ.1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

ரூ.3,000 செலுத்தியவர்கள் ரூ.20 லட்சமும், ரூ.4 ஆயிரம் செலுத்தியவர்கள், ரூ.4.50 லட்சமும் இனி சொத்து வரியாக கூடுதலாக செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வணிக வளாக கட்டிடங்கள் கண்டுபிடிப்பால் மாநகராட்சிக்கு தற்போது அரையாண்டு சொத்து வரி வருவாய் ரூ.6 கோடி அதிகரித்துள்ளது. உதவி ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து 100 வார்டுகளிலும் வணிக வளாக கட்டிடங்களை அளவீடு செய்வதற்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதனால், மாநகராட்சிக்கு இன்னும் ரூ.20 கோடிக்கு மேல் சொத்துவரி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

x