கேரளாவுக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி - தடுப்பு நடவடிக்கையில் இரு மாநில அதிகாரிகள் தீவிரம்


கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக கம்பத்தில் நடந்த இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்.

கம்பம்: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. இதற்காக, மாநில எல்லையில் சோதனையை தீவிரப் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இரு மாநில அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகள் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளன. இங்கு ரேஷன் கடைகளில் வழங் கப்படும் இலவச அரிசி அருகில் உள்ள கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது. கேரளாவில் இந்த அரிசிக்கு கூடுதல் விலை கிடைப்பதால் இதுபோன்ற நிலை தொடர்கிறது.

கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வாகனம், பொதுப் போக்கு வரத்து வாகனம் மற்றும் தலைச் சுமையாகவும் ரேஷன் அரிசியை அதிகளவில் கடத்தும் நிலை உள்ளது. மொத்த வியாபாரிகள் பலர் அரிசியை மாவாக மாற்றி, மாட்டுத்தீவனம் என்ற பெயரிலும் கடத்திச் செல்கின்றனர்.

இதனால், ரேஷனுக்காக தமிழக அரசு ஒதுக்கும் மானியம் விரயமாவதுடன், பயனாளிகளுக்கும் குடிமைப் பொருள் சென்றடையாத நிலை உள்ளது. இதுபோன்ற கடத்தலை தடுப்பதற் காக அவ்வப்போது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கம்பத்தில் இரு மாநில அதிகாரிகள் சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம் கோட்டாட்சி யர் கார்த்தியாயினி தலைமை வகித்தார். கேரளா சார்பாக பீர்மேடு வட்ட வழங்கல் அலுவலர் மோகனன், ஆய்வாளர்கள் ஷிபுமோன்தாமஸ், ரெஜிதாமஸ், தமிழகம் சார்பாக உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சுரேஷ், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் லட்சுமி, மகாலட்சுமி, வளர்மதி மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.

இதில், இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப் பட்டது. மேலும், சந்தேகப்படும் வாகனங்களின் பதிவெண், தனிநபர் தகவல்கள், அவர்களுடைய செல்போன் எண் போன்றவற்றை இரு மாநில அதிகாரிகளும் பரிமாறிக் கொள்ள வேண்டும். தமிழக-கேரள எல்லைப் பகுதி களில் இரு மாநில அதிகாரிகளும் தொடர்ந்து கூட்டுச் சோதனை நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

x