‘கண்மாய் அமைக்க நிலம் தந்தோம்... 22 ஆண்டாக இழப்பீடு இல்லை” - கே.சுப்பையாபுரம் விவசாயிகள் வேதனை


கே .சுப்பையாபுரம் கண்மாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் முழுவதும் வெளியேறி, அங்குள்ள பள்ளத்தில் தேங்கி கிடக்கிறது.

கோவில்பட்டி: புதூர் அருகே பாசன கண்மாய்அமைக்க நிலம் கொடுத்து 22 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்க வில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புதூர்வட்டாரம் காடல்குடி அருகேகே.சுப்பையாபுரம் கிராமத்தில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு விவசாயம் பிரதானதொழிலாகும். இங்கு மிளகாய்,வெங்காயம், மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், கம்பு, பருத்தி போன்றவை சாகுபடிசெய்யப்படுகின்றன. நீண்ட காலப் பயிரான முண்டு வத்தல் அதிகம் பயிரிடப்படுகிறது.

வானம் பார்த்த பூமியான இப்பகுதியில், மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீரைத் தேக்கி வைக்க போதிய நீர்நிலைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில்கலந்தது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2002-ம் ஆண்டு கே.சுப்பையாபுரம், காடல்குடி, வாதலக்கரை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 90 ஏக்கர் நிலங்களை நீர் வள ஆதாரத்துறை கையகப்படுத்தியது. இதில்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கே.சுப்பையாபுரம் கிராமத்துக்கு வெளியே புதிய பாசனகண்மாய் உருவாக்கப்பட்டது.

புதிய பாசன கண்மாய் மூலம் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிக்கு கோடையில் தண்ணீர் பாய்ச்சுவதால் கூடுதல் விளைச்சலைப்பெறலாம் என விவசாயிகள் மகிழ்சியடைந்தனர். புதிய பாசன கண்மாயில்இரண்டு மதகுகள் கட்டப்பட்டன. இதன் மூலம்சுமார் 150 ஏக்கர் நிலம் நேரடி பாசனமாகவும், பல நூறு ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதகுகள் தாழ்வான பகுதியிலும், ஆயக்கட்டு நிலங்கள் மேட்டுப்பகுதியாகவும் அமைந்துவிட்டன.இதனால்கண்மாயில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டினாலும், மதகைத் திறந்தவுடன் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதில்லை. இதன் காரணமாக தண்ணீர் தேக்கியும் கால்வாய் வழியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மோட்டார் மூலம் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

மேலும், நிலம் கையகப்படுத்தி 22 ஆண்டுகளாகியும் இதுவரை அதற்குரிய இழப்பீட்டுத் தொகையும் தரப்படவில்லையென விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

புதூர் அருகே கே .சுப்பையாபுரம் கிராமத்துக்கு அருகே அமைக்கப்பட்ட
கண்மாயின் மதகு பகுதி தூர்ந்து போய் காணப்படுகிறது

கண்மாயில் உடைப்பு: இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள்சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது:கே.சுப்பையாபுரம் கண்மாயில் கடந்த டிசம்பர் 16,17-ம் தேதிகளில் பெய்த கன மழைக்கு உபரி நீர்வெளியேறும் மறுகால்தலை அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் முழுவதுமாகவெளியேறி விட்டது.

இந்த உடைப்பு கடந்த 6 மாதங்களாக சரி செய்யப்படவில்லை. மழைக்காலம் தொடங்குவதற்குள் கரை உடைப்பைஅடைக்க வேண்டும். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

ஷட்டர் திறந்தவுடன் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில் புதியமதகுகளை உருவாக்க வேண்டும். தண்ணீர்பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் நீர்ப்பிடிப்புபகுதியில் இருந்து மோட்டார் மூலம் பாய்ச்சநீர்ப்பாசன விதிகளை திருத்தியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் சித்தமல்லு, ஆறுமுகம்ஆகியோர் கூறும்போது, “கண்மாய் வந்தால்விவசாயம் செழிக்கும் என்ற எண்ணத்தோடுதான் நிலங்களை கொடுத்தோம். ஆனால், இன்று வரை இழப்பீட்டுத் தொகை வழங்க வில்லை.

22 ஆண்டுகள் கடந்துவிட்டன. நாங்களும் தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித பயனும் இல்லை. கண்மாய் அமைத்தும் பயனில்லை,” என்றனர்.

x