வெளிமாநில விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வருகை: ஓசூர் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை


தேன்கனிக்கோட்டை பகுதியில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள உள்ளூர் மண்பாண்ட கலைஞர்கள் தயார் செய்துள்ள விநாயகர் சிலைகள்.

ஓசூர்: ஓசூர் பகுதிக்கு வெளி மாநிலங்களிலிருந்து விற்பனைக்கு விநாயகர் சிலைகள் வரத்து அதிகரித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விற்பனை ஆர்டர் கிடைக்க வில்லை என உள்ளூர் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஓசூர், பாகலூர்,கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகை விற்பனையை மையமாக வைத்து மண் பானைகளையும், தீபாவளி மற்றும் கார்த்திகை மாதத்துக்கு அகல்விளக்கு மற்றும் நவராத்திரி, கிருஷ்ணஜெயந்தி விற்பனைக்காக தெய்வங்கள் சிலைகளையும், விநாயகர் சதூர்த்தி யின்போது, விநாயகர் சிலையையும் தயார் செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.

தொடர் பாதிப்பு: இப்பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் விற்பனைக்கு 3 மாதத்துக்கு முன்னரே தங்கள் உற்பத்தியை தொடங்கி விடுவார்கள். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட கலைஞர்களுக்கு களி மண் பிரச்சினை, சீன களிமண் பொம்மைகள் மற்றும் வெளி மாநில சிலைகள் வரத்தால், உள்ளூர் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால், தற்போது ஒரு சிலர் மட்டுமே சிலைகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், வரும் செப்டம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஓசூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓசூர் பகுதி வியாபாரிகள் பலர் ஹைதராபாத் மற்றும் வடமாநிலங்களிலிருந்து அதிக அளவில் விநாயகர் சிலைகளைக் கொள்முதல் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர். இதனால், உள்ளூர் சிலை தயாரிப்பு மண்பாண்ட கலைஞர்களுக்கு விற்பனையின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

விதிமுறையை பின்பற்றி: இதுதொடர்பாக மண்பாண்ட கலைஞர்கள் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக, ஓசூர் பகுதியில் மற்ற பண்டிகைகளை விட விநாயகர் சதுர்த்தியின்போது, அதிக அளவில் சிலைகள் விற்பனையாகும்.

மேலும், இப்பகுதியில் பன்மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் அரசின் வழிகாட்டுதல் படி களிமண் மற்றும் கிழங்குமாவு, பேப்பர் கூழ் ஆகியவை மூலம் 1 அடி முதல் 10 அடி வரையில் சிலைகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

இந்நிலையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளி மாநிலங்களில் புதிய தோற்றங்களில் தயார் செய்துள்ள விநாயகர் சிலைகளை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் உள்ளூரில் உற்பத்தி செய்யும் சிலைகள் மீது ஆர்வம் காட்டாமல் வெளிமாநில சிலைகளை வாங்க ஆர்வம் காட்சி வருகின்றனர்.

அரசு உதவிட வேண்டும்: மேலும், கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு ஆர்டர் கிடைக்காமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு வெளிமாநில சிலைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பது உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அரசு மண்பாண்ட கலைஞர்களுக்கு புதிய தோற்றத்தில் சிலைகள் தயார் செய்ய அச்சு வாங்க நிதியுதவி வழங்க வேண்டும். மேலும், உள்ளூர் தயாரிப்புகளை கதர் பவனில் விற்பனை செய்ய கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், உள்ளூர் தயாரிப்புகளை வாங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x