சிப்பாய் புரட்சி முதல் வெள்ளையனே வெளியேறு வரை - இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு


இந்தியா, உலகிலுள்ள பெரிய ஜனநாயகக் குடியரசு நாடுகளில் ஒன்றாகத் திகழும் சிறப்புக்குரியது. இன்றைக்கு வல்லரசு நாடுகளுள் ஒன்றாக வளர்ந்துவரும் இந்தியத் திருநாடு, 77 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரின் ஆளுகையில் சிக்கிக் கிடந்தது. தேசத்தின் விடுதலைக்காக நம் தலைவர்களும், நம் முன்னோர்களும் ‘விடுதலை எங்கள் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவோம்’ எனும் முழக்கத்துடன் களத்தில் நின்று போராடினார்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உயிர்த் தியாகத்தாலும், வீரஞ்செறிந்த போராட்டங்களின் காரணமாகவும் 1947 ஆகஸ்ட் 15 அன்று நம் நாடு விடுதலை பெற்று, சுதந்திரக் காற்றை சுவாசித்தது. இந்திய சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது ஆண்டின் நிறைவினை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் தேச விடுதலைக்காக இரத்தம் சிந்தியும், உயிரை நீத்தும் போராடிய ஒப்பற்ற தேசத் தியாகிகளின் நினைவினைப் போற்றுவோம்.

நமது இந்திய சுதந்திர போராட்டமென்பது 200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டநெடிய போராட்ட வரலாற்றையும் பின்னணியையும் உடையது. இந்த இனிய நாளில் அத்தகைய போராட்டத்தின் சில நிகழ்வுகளையேனும் நாம் தெரிந்து வைத்திருத்தல் அவசியமன்றோ..!

கிழக்கிந்திய கம்பெனியின் வருகை: பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி எனும் பெயரோடு இந்தியாவிற்குள் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர், இந்தியாவின் பல பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர்களுக்குள் இருந்த கசப்புணர்வைத் தூண்டிவிட்டனர். இப்படியாக தொடங்கிய பிரிட்டிஷாரின் சூழ்ச்சி, இந்திய ஆட்சிக்கட்டிலில் பிரிட்டிஷார் அமர வழிவகுத்தது.

ஆயுத பலம் கொண்ட பிரிட்டிஷ் படையைக் கண்டு, பல மன்னர்களும் தயங்கிநின்ற நிலையில், ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராக தனது வலுவான குரலை மைசூரை ஆண்ட திப்புசுல்தான் எழுப்பினார். பின்னர் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்டாலும், அவர் உயர்த்திப் பிடித்த ‘சுதந்திர பெருந்தீ’ இந்திய தேசமெங்கிலும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது.

வேலூர்க் கோட்டையில் சிப்பாய் புரட்சி: இந்தியப் படை வீரர்கள் ஐரோப்பிய உடைகளைத்தான் அணிந்துகொள்ள வேண்டும், மத அடையாளங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஆங்கிலேயரிடமிருந்து 1806-ஆம் ஆண்டு உத்தரவு வந்தது. இதை எதிர்த்து வேலூர்க் கோட்டையில் சிப்பாய் கலகம் வெடித்தது. இதுவே பின்னால் வந்த சிப்பாய் புரட்சிக்கு வித்திட்டது. ஆங்கிலேய அரசுக்கு எதிரான கோபம் எங்கெங்குமாகப் பரவியது.

தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்நாடகத்தின் கிட்டூர் சென்னம்மா போன்றவர்கள் ஆங்கிலேயப் படைகளைத் துணிச்சலாக எதிர்த்து நின்றனர். துப்பாக்கிக் குண்டுகளில் பசு, பன்றியின் கொழுப்பு தடவப்பட்டதாக வதந்தியொன்று 1857-இல் கிளம்பியது. இதனை எதிர்த்து சிப்பாய்கள் கலகம் செய்தனர். இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் பின்னர் வெடித்தன. ஆங்கிலேயர்கள் இரும்புக்கரம் கொண்டு போராட்டக்காரர்களை அடக்கினர்.

சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை: அதுவரையிலும் கிழக்கிந்திய நிறுவனம் மூலம் ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கம், நேரடியான ஆட்சிக்குக் கீழ் இந்தியாவைக் கொண்டுவந்தது. 1877-ஆம் ஆண்டு விக்டோரியா ராணி இந்தியாவின் மகாராணி என அறிவிக்கப்பட்டார். நாடு முழுவதும் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ எனும் முழக்கம் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனை சுதந்திர போராட்ட வீரரான பால கங்காதர திலகர் முன்னெடுத்தார்.

சுவாமி விவேகானந்தர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், அரவிந்தர், சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் தாகூர், தாதாபாஜ் நவ்ரோஜி போன்றவர்களின் பேச்சும் எழுத்தும் செயலும் மக்களிடம் சுதந்திர பெருங்கனலைத் தூண்டிவிட்டன. 1905-ஆம் ஆண்டு வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்துக்கும் வழிவகுத்தது.

சத்தியாகிரகம் எனும் அகிம்சா வழி: தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்தியாவுக்கு வந்தார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோரைச் சந்தித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினார். ‘சத்தியாகிரகம்’ என்கிற அகிம்சா வழி போராட்ட வடிவத்தை கையிலெடுத்தார். ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படுபவர்களை விசாரணை இன்றி, இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும் ‘ரெளலட் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் தீவிரமடைந்தன. 1919-ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆங்கிலேய ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் முன்னறிவிப்பு இன்றி, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்த உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியது. போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இந்திய தேசிய காங்கிரஸூம் ஒத்துழையாமை இயக்கமும்: 1929-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் நாடு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை ஆரம்பித்தது. ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் புறக்கணித்தல், அரசு வேலைகளை ராஜினாமா செய்தல், வரி செலுத்த மறுத்தல், ஆங்கிலேயர்களின் கௌரவப் பட்டங்களைத் துறத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.

1930-ஆம் ஆண்டு உப்புக்கு வரி விதித்தது ஆங்கிலேய அரசு. காந்தி உப்புச் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 23 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டு, தடையை மீறி உப்பு எடுத்தார். இந்த யாத்திரையில் ஏராளமான மக்கள் இணைந்தனர். தமிழ்நாட்டில் வேதாரண்யத்திலும் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.

பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், புரட்சி இயக்கங்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தார். லாலா லஜபதி ராயின் இறப்புக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, ஆங்கிலேய அரசு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரைத் தூக்கிலிட்டது. இது நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைய காரணமானது.

இரண்டாம் உலகப் போர்: 1937-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஐந்து பிரதேசங்களில் பெரும்பான்மை பெற்றது. இரண்டு இடங்களில் தலைமையைப் பிடித்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. இந்தியத் தலைவர்களிடமோ மக்களிடமோ கருத்து கேட்காமல், இந்தியா போரில் பங்கேற்கும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. இது பெரும்பான்மையினருக்கு அதிருப்தியைத் தந்தது.

சிலர் ஆதரித்தார்கள், பலர் எதிர்த்தார்கள். இந்தியர்கள் சுதந்திரத்துக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டு மடிய வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் விருப்பமாக இருந்தது. நூறாண்டுகளுக்கு மேல் போராடியும் கிடைக்காத சுதந்திரத்தை, எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்கிற எண்ணம் உருவானது.

வெள்ளையனே வெளியேறு: வெளிநாடுகளில் போர்க் கைதிகளாக இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி, ‘இந்திய தேசிய ராணுவம்’ என்கிற அமைப்பை உருவாக்கினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதன்மூலம் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்று நம்பினார். இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைக்கு ‘கேப்டன் லட்சுமி’ தலைமை ஏற்றார்.

1942-ஆம் ஆண்டு ‘செய் அல்லது செத்து மடி’ என்கிற முழக்கம் இந்தியா முழுவதும் பரவியது. அதுவே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமாக உருவெடுத்தது. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டம்
உச்சத்தை அடைந்தது.

ஆங்கிலேய இந்திய கவர்னரான ஜெனரல் மவுண்ட் பேட்டன், 1947-ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று மதச்சார்பற்ற இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என்று இந்தியாவை இரண்டாகப் பிரித்தார் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார். போராடிப்பெற்ற இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாறை அறிந்துகொள்வோம். பெற்ற சுதந்திரத்தின் பெருமையை மென்மேலும் போற்றி வளர்ப்போம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

x