32 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம்!


செயல்படாமல் உள்ள விருதுநகர் புதிய பேருந்து நிலையம்.

விருதுநகர்: பெரும் எதிர்பார்ப்புடன் கட்டி முடிக்கப்பட்டு சில நாட்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முடங்கி 32 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது இதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

விருதுநகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் பேருந்து நிலையமானது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு போதாது என்பதாலும், வெளியூர் பேருந்துகள் வந்து செல்ல வசதியாக இல்லாததாலும், விருதுநகர் - சாத்தூர் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு, 8.10.1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு 3.5.1992-ல் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.

சில நாட்கள் மட்டுமே இயங்கிய இந்த புதிய பேருந்து நிலையம், பின்னர் திடீரென முடங்கியது. தொடர்ந்து, போதிய பராமரிப்பு இல்லாததால் சாலைகள் சேதமடைந்தன. அதனால், விருதுநகர் நகராட்சி ஒருங்கிணைந்த சிறிய மற்றும் நடுத்தர நகர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கடந்த 2006-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தில் கான்கிரீட் தளம் அமைத்து, கட்டிடங்களை புனரமைத்தது. ஆனால், அதன் பின்னரும் பேருந்துகள் வருகையின்றி பேருந்து நிலையம் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது.

மதுரையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, கோவில்பட்டி செல்லும் பேருந்துகள் பைபாஸ் சாலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் பேருந்துகள் விருதுநகருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்களும், வர்த்தகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் முயற்சி எடுத்தனர். இது தொடர்பாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. விருதுநகர் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், விருதுநகரிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கணக்கிடப்பட்டு, அவை விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், இம்மாதம் 8-ம் தேதி புதிய பேருந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு இன்னும் சில புனரமைப்புப் பணிகள் நிலுவையில் உள்ளதால், அதை முடித்த பின்னர் புதிய பேருந்து நிலையம் ஓரிரு வாரத்தில் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள், கழிப்பறைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரிசெய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையத்துக்கும், புதிய பேருந்து நிலையத்துக்கும் போதிய அளவு நகரப் பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

x