பாம்பன் புதிய பாலத்தில் அக்.1 முதல் ரயில் இயக்க நடவடிக்கை


ராமேசுவரம் பாம்பன் கடலில் உள்ள பழைய மற்றும் புதிய ரயில் தூக்குப் பாலங்கள்.

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராமேசுவரத்திலிருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் பாலம் 1914-ல் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், அடிக்கடி தொழில் நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதையடுத்து, பழைய பாலம் அருகில் 2,078 மீட்டர் நீளத்தில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் 2018-ல் அறிவித்தது. முதல் கட்டமாக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் 2019-ல் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தொடங்கின. எனினும், பாம்பன் பகுதியில் அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட காரணங்களாலும், கரோனா ஊரடங்கு காரணமாகவும் பணிகள் பாதிக்கப்பட்டன. திட்டச் செலவு ரூ.535 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

ரயில் சேவை நிறுத்தம்: இதனிடையே, பாம்பன் பழையரயில் பாலத்தில் உள்ள தூக்குப் பாலத்தில் தொழில்நுட்பக் கோளாறால் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி முதல் ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் வரும் ரயில்கள் அனைத்தும் மண்டபம், ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து, புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களை அமைக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 99 இணைப்பு கர்டர்களில், மண்டபம் பகுதியிலிருந்து தூக்குப் பாலம் வரை 76 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன.

செங்குத்து தூக்குப் பாலம்: பாம்பன் சாலைப் பாலத்துக்கு இணையான உயரத்தில், புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில், 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. அருகில் தூக்குப் பாலத்துக்கான ஆபரேட்டர் அறை, மின்மாற்றி அறை, மின்சார கேபிள்உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்காக இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மீண்டும் ரயில் இயக்கம்: இந்நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக மண்டபம் - ராமேசுவரம் இடையே மீண்டும் ரயில் போக்குவரத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செப். 30-ம் தேதிக்குள் புதிய ரயில்பாலத்தில் அனைத்து வகையான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x