ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத கிடங்காக இருந்த திருப்புல்லாணி அரண்மனை மீட்டெடுக்கப்படுமா?


திருப்புல்லாணி அரண்மனையின் தற்போதைய தோற்றம்

ராமேசுவரம்: சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த, ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள அரண்மனையை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும், என தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: கி.பி.1759-ல் டச்சுக்காரர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள மன்னர் செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்றனர். நாளடைவில், அதை ஒரு கோட்டை யாக மாற்ற முயற்சி செய்தபோது, போர் பதற்றம் உருவானது.

அதையடுத்து, பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரானபோது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை திருப்புல்லாணி அரண்மனையை கட்டினார். கி.பி.1767-ல் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு பின், சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்க மாயினர்.

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேது நாட்டை கைப்பற்றிய பிறகு அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்கு தெரியாத அளவுக்கு காட்டில் மறைவான பகுதியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தினார்.

வே .ராஜகுரு

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி என இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டிடங்கள் 4 உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் மூலையிலும் கதவு உள்ள 4 அறைகளும், நீண்ட 4 தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும், 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது.

இதிலிருந்த கதவு, ஜன்னல்கள் பிரித்தெடுக்கப்பட்டு விட்டதால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்து சேதமடைந்து உள்ளன. கட்டிடங்களில் மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் இருப்பதும், இந்த அரண்மனை ஆயுதத் தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

இதேபோன்ற ஒரு ஆயுதத் தொழிற்சாலை அரண்மனை, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்தது அழிந்துவிட்டது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம்.

எங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து, அரசு பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

x